பதிவு செய்த நாள்
29
ஜூலை
2019
02:07
கிருஷ்ணகிரி: உண்ணத்தூர் மாரியம்மன் கோவில் தீ மிதி விழாவில், பக்தர்கள் தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். கிருஷ்ணகிரி, பொன்மலைக்கோவில், நாராயணன் கொட்டாயில் உள்ள உண்ணத்தூர் மாரியம்மன் கோவில், 27ம் ஆண்டு தீ மிதி மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்றிரவு, 12:00 மணிக்கு பெண்கள் தீச்சட்டி எடுத்து, கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை, 5:30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்காரமும், 9:30 மணிக்கு தீ குண்டம் பூஜை செய்தலும் நடந்தது. பிற்பகல், 12:00 மணிக்கு, பெண்கள் தீச்சட்டி எடுத்து, அம்மனை பல்வேறு இடங்களுக்கு நகர்வலம் கொண்டு சென்று, பின்னர் கோவிலுக்கு வந்தனர். அங்கு பூஜைகள் செய்து, பெண்கள் கரகம் சுமந்தும், பக்தர்கள் அம்மனை சுமந்தும் தீ மிதித்தனர்.