Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆன்மாவை அறிவதற்கான அடிப்படை ... மரண பயத்தை வெல்! மரண பயத்தை வெல்!
முதல் பக்கம் » கட உபநிஷதம் (மரணத்திற்கு பின்னால்)
மரணத்திற்குப் பின்னால் ..
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 மார்
2012
12:03

மரணத்திற்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை இந்த அத்தியாயம் கூறுகிறது. நம்மில் இருவர் இருப்பதாக ஏற்கனவே (1.3.1) கண்டோம். ஒன்று ஜீவன்; இன்ப துன்ங்களை அனுபவிப்பது. மற்றொன்று எதிலும் கலந்து கொள்ளாமல் சாட்சியாக நிற்கின்ற ஆன்மா. உடல் வீழ்ந்தபிறகு ஜீவன் தனது பயணத்தைத் தொடர்கிறது; வாழும்போது செய்த செயல்களுக்கும் பெற்ற அனுபவங்களுக்கும் ஏற்ப மனிதனாகவோ மற்ற உயிரினங்களாகவோ பிறக்கிறது. ஜீவனின் இந்த மாற்றங்களால் ஆன்மா பாதிக்கப்படுவதில்லை.

அதுவே நீ என்ற உயர்நிலை தியானப் பகுதி இங்கும் மூன்று கோணங்களில் (1,4,8) கூறப்படுகிறது.

ஆன்ம அனுபூதி பற்றிய சிறந்த விளக்கம் ஒன்றையும் நாம் காண்கிறோம்.

உடம்பென்னும் நகரம்

1. புரமேகாதச த்வாரம் அஜஸ்யாவக்ரசேதஸ
அனுஷ்ட்டாய ந சோசதி விமுக்தச்ச விமுச்யதே ஏதத் வை தத்

ஏகாதச த்வாரம்-பதினொரு வாசல்களை உடைய; புரம்-உடம்பு; அஜஸ்ய-பிறப்பற்ற; அவக்ர சேதஸ-மாறுபாடற்ற உணர்வின்; அனுஷ்ட்டாய-தியானித்து; ந சோசதி-கவலைப்பட மாட்டான்; விமுக்த-சுதந்திரனாகி; விமுச்யதே-விடுபடுகிறான்; ஏதத் வை-இதுவே; தத்-அது.

பொருள் : பதினொரு வாசல்களை உடையதான உடம்பு, பிறப்பற்ற, மாறுபாடற்ற உணர்வை உடைய ஆன்மாவின் கருவியாகும். இவ்வாறு தியானித்து ஒருவன் கவலைகளிலிருந்து விடுபடுகிறான்; சுதந்திரனாகி பிறவிகளிலிருந்து விடுபடுகிறான். நீ கேட்டது இந்த ஆன்மாவைப்பற்றியே.

உடம்பை ஒரு தடையாக நினைத்திருந்தேன். ஆனால் உடம்பில் இறைவன் கோயில் கொண்டிருக்கிறான் என்பதைக் கண்டபிறகு அதனை ஒரு கோயிலாக எண்ணி கவனமாக பாதுகாக்கிறேன் 
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக்குள்ளே கோயில் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே-திருமந்திரம்

என்கிறார் திருமூலர். உபநிஷதம் உடம்பை ஆன்மாவின் கருவியாகக் கூறுகிறது. உடம்பை எப்படிப் பேண வேண்டும் என்பதற்கு இந்த மந்திரங்கள் வழிகாட்டுகின்றன. உடம்பை ஒருபோதும் வெறுக்கவோ, ஒரு தடையாகக் கருதவோ கூடாது. ஆன்மாவை உணர்வதற்காக இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கருவியே உடம்பு என்ற எண்ணம் வேண்டும்.

இந்த உடம்பு பதினொரு வாசல்களை உடைய ஒரு நகரம் (புரம்) என்று கூறப்படுகிறது. இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசி துவாரங்கள், வாய், தொப்புள், குறி, குதம் மற்றும் உச்சந்தலையிலுள்ள பிரம்மரந்திரம் (பிரம்ம ரந்திரம் என்பது உச்சந்தலையில் உள்ள ஒரு நுண்ணிய துவாரம். சாதாரண கண்களுக்கு புலப்படாதது. யோகிகள் மரண வேளையில் இதன் வழியாக தங்கள் பிராணனை (உயிரை) விடுவார்கள் என்று கூறப்படுகிறது.) ஆகியவை பதினொரு வாசல்களை. உடம்பை ஒரு நகரமாகக் கூறுவது எண்ணிப் பார்க்கத்தக்கது. ஒரு நகரத்தில் நடைபெறுகின்ற அத்தனை செயல்பாடுகளும் உடம்பில் நிகழ்வதை இன்றைய உடலியலின் துணையால் நாம் நன்றாக அறிய முடியும். சமுதாய வாழ்க்கை, கல்வி, கோயில், போக்குவரத்து, நதிகள், உணவு, உற்பத்தி, சுத்திகரிப்பு, கழிவை வெளியேற்றுதல், காவல் என்று ஒன்றுவிடாமல் எல்லா துறைகளும் உடம்பினுள் உள்ளன. நமது முனிவர்கள் விஞ்ஞானத்தின் துணையின்றி அன்றே இதனை உணர்ந்து கூறியிருப்பது வியக்கத்தக்கது. சாந்தோக்ய உபநிஷதம் உடம்பை வெறும் நகரம் என்று கூறாமல், இறைவன் வாழும் நகரம்(பிரஹ்ம புரம்) (சாந்தோக்ய உபநிஷதம், 8.1.1.) என்று கூறுகிறது.

அதுவே நீ என்ற தியானப் பகுதி இது. ஆன்மா வாழும் வீடு இந்த உடம்பு. அதாவது உள்ளே உறைகின்ற ஆன்மா என்பது ஒன்று, உடம்பு என்பது வேறொன்று. இதனை தியானிப்பவன், இந்த உண்மையை ஆழ்ந்து சிந்தித்து தனக்கு உரியதாக்கிக் கொள்பவன். அந்த உணர்விலேயே வாழ முடிந்தவன் சுதந்திரனாகிறான். அதாவது உடம்பு, மனம் போன்ற கருவிகள் தன்னைக் கட்டுப்படுத்துவதிலிருந்து விடுபடுகிறான், உடம்பும் மனமும் தன்னிலிருந்து வேறானவை, அவை தன்னைக் கட்டுப்படுத்துவதில்லை என்று உணர்கின்ற ஒருவன் மரணத்திலிருந்து விடுபடுகிறான். ஏனெனில் மணம் உடம்பிற்கு மட்டுமே. சுருக்கமாகச் சொல்வதானால் அவன் மரணத்தை வெல்கிறான். உடம்பு வீழ்ந்தபிறகு, மீண்டும் பிறவாத நிலையை அடைகிறான்.

2. ஹம்ஸ சுசிஷத் வஸுரந்தரிக்ஷஸத்
ஹோதா வேதிஷத் அதிதிர் துரோணஸத்
ந்ருஷத் வரஸத் ரிதஸத் வ்யோமஸதப்ஜா
கோஜா ரிதஜா அத்ரிஜா ரிதம் ப்ருஹத்

ஹம்ஸ-எங்கும் செல்வது; சுசிஷத்-தூய ஆகாயத்தில் சூரியனாக இருப்பது. வஸு-அனைத்திற்கும் ஆதாரமானது; அந்தரிக்ஷஸத்-வெளியில் காற்றாக இருப்பது;ஹோதா-அக்கினியாக; வேதிஷத்-பூமியில் இருப்பது; அதிதி-விருந்தினனாக; துரோணஸத்-வீட்டில் இருப்பது; ந்ருஷத்-மனிதனில் உறைவது; வரஸத்-தேவனில் உறைவது; ரிதஸத்-உண்மையில் உறைவது; வ்யோமஸத்-ஆகாயத்தில் உறைவது; அப்ஜா-நீரில் தோன்றுவது; கோஜா-பூமியில் தோன்றுவது; ரிதஜா-யாகத்தில் தோன்றுவது; அத்ரிஜா-மலையில் தோன்றுவது; ரிதம்-பிரபஞ்ச நியதியாக விளங்குவது; ப்ருஹத்-பெரியது.

பொருள் : அந்த ஆன்மா எங்கும் செல்வது, தூய ஆகாயத்தில் சூரியனாக இருப்பது. அனைத்திற்கும் ஆதாரமானது, வெளியில் காற்றாக இருப்பது. அக்கினியாக பூமியில் இருப்பது, விருந்தினனாக வீட்டில் இருப்பது, மனிதனில் உறைவது, தேவனில் உறைவது, உண்மையில் உறைவது, ஆகாயத்தில் உறைவது, நீரில் தோன்றுவது, பூமியில் தோன்றுவது, யாகத்தில் தோன்றுவது, மலையில் தோன்றுவது, பிரபஞ்ச நியதியாக விளங்குவது, பெரியது.

ஆன்மாவின் எங்கும் நிறைந்த தன்மைக்கான ஒரு பரந்த விளக்கத்தை இங்கே காண்கிறோம்.

எங்கும் நிறைந்ததாக இருப்பதால் அது செல்ல முடியாத இடம் என்ற ஒன்று இல்லை. எனவே எங்கும் செல்வது.

விருந்தினர் தெய்வமாகவே கருதப்பட வேண்டும் (அதிதி தேவோ பவ-தைத்திரீய உபநிஷதம் 1.11.2) என்கிறது தைத்திரீய உபநிஷதம். ஒரு காலத்தில் இந்தக் கருத்து பிரபலமாக இருந்ததாகவும் தற்போது மறைந்து வருவதாகவும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார்.

சங்கு, சிப்பி, முத்து, மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் நீரில் தோன்றுபவை. தானியங்கள் முதலானவை பூமியில் தோன்றுபவை. பிரபஞ்சத்தில் பல்வேறு சக்திகள் செயல்படுவதையும். அந்த சக்திகளே பிரபஞ்சத்தை இயக்குவதையும் கண்ட வேத கால மனிதன் வாழ்வின் வளத்திற்கும் நலத்திற்கும் அந்த தேவர்களை நாடினான். யாகங்களின்மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டான். எனவே யாகம் என்பது பொதுவாக வேத சக்திகளின் சின்னமாக உள்ளது. அந்த வேத சக்திகளாகவும் ஆன்மா இருக்கிறது. அதுவே யாகத்தில் தோன்றுவது என்று கூறப்பட்டது.

மலையிலிருந்து தோன்றுகின்ற நதிகள் முதலானவையாகவும் ஆன்மா உள்ளது. சற்றே அமைதியாக நின்று இந்த உலகை, அதன் செயல்பாடுகளை ஒருமுறை பார்க்கத் தெரிந்த யாருக்கும் இந்த உலகின் இயக்கம் ஒரு மாறாத நியதிக்குக் கட்டுப்பட்டு நடைபெறுவது தெரியவரும். சூரிய உதயம், காற்றின் இயக்கம், பூக்களின் மலர்ச்சி, நட்சத்திரங்களின் பயணம், உயிரினங்களின் செயல்பாடுகள் என்று அனைத்திலும் ஒரு நியதி, ஓர் ஒழுங்கு நிலவுகிறது. இந்த ஒழுங்காகவும் நியதியாகவும் ஆன்மாவே உள்ளது.

உடம்பின் தலைவன்: ஜீவன்

3. ஊர்த்வம் ப்ராணமுன்னயதி
அபானம் ப்ரத்யகஸ்யதி
மத்யே வாமனமாஸீனம்
விச்வே தேவா உபாஸதே

ப்ராணம்-பிராணனை; ஊர்த்வம்-மேலே; உத் நயதி-இயக்குவது; அபானம்-அபானனை; ப்ரத்யக்-கீழே; அஸ்யதி-தள்ளுவது; மத்யே-உடம்பின் நடுவில்; அஸீனம்-உள்ளது; வாமனம்-ஜீவனை; விச்வே-எல்லா; தேவா-புலன்களும்; உபாஸதே-சார்ந்திருக்கின்றன.

பொருள் : பிராணனை மேலே இயக்குவதும். அபானனைக் கீழே தள்ளுவதுமான ஜீவன் உடம்பின் நடுவில் உள்ளது. எல்லா புலன்களும் அதனைச் சார்ந்திருக்கின்றன.

இந்திய ரிஷிகளின் மாபெரும் கண்டுபிடிப்புகளுள் ஒன்று பிராணன். இதுபற்றி 2.1.7-இல் கண்டோம். எங்கும் நிறைந்த, பிரபஞ்சத்தின் எல்லா இயக்கங்களுக்கும் காரணமான இந்தப் பிராணன் உடம்பில் பத்துவித செயல்களில் ஈடுபட்டு உடம்பை இயக்குகிறது

பிராணன்-மேல் நோக்கிய இயக்கம்
அபானன்- கீழ் நோக்கிய இயக்கம்
வியானன்- எல்லாப் பக்க இயக்கம்
உதானன்- மரண வேளையில் ஜீவன் வெளியேற உதவுதல்
ஸமானன்- உணவு ஜீரணம், உணவை ரத்தம் போன்றவையாக மாற்றுதல்
நாகன்-வாந்தி, ஏப்பம்
கூர்மன்- கண் இமைகளின் இயக்கம்
க்ருகலன்- பசி
தேவதத்தன்- கொட்டாவி
தனஞ்ஜயன்- உடம்பிற்கு ஆரோக்கியம் அளித்தல்

இவை அனைத்தும் மொத்தமாக பிராணன் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தப் பிராணனை இயக்குவது ஜீவன் என்கிறது இந்த மந்திரம். ஜீவன் இந்தப் பிராணனின் மூலமாக உடம்பையும் மனத்தையும் கட்டுப்படுத்தி அவற்றின் வாயிலாக சுகதுக்க அனுபவங்களைப் பெறுகிறது. இவ்வாறு உடம்பிற்கும் மனத்திற்கும் தலைவனாக உள்ளது. ஜீவன் அல்லது உயிர்.

மரணத்திற்குப் பின்னால்: 4-11

மனிதன் ஐந்தின் தொகுதியால் சூழப்பட்டவன் உடம்பு, மனம், பிராணன், விஞ்ஞானம் (புத்தி), ஆனந்தம், இந்த ஐந்தும் ஆன்மாவின் உறைகளாக, சட்டைகளாகக் கருதப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான வாழ்க்கை இருக்கிறது. தைத்திரீய உபநிஷதம் இவை ஒவ்வொன்றையும் ஆன்மா என்றே அழைப்பது கருத்தில் கொள்ளத்தக்கது. கடைசி நான்கையும் சேர்த்தே பொதுவாக நாம் உயிர் என்று அழைக்கிறோம். இந்த உடம்பினுள் இரண்டு ஆன்மா இருப்பதாகவும் ஒன்று அனுபவங்களைப் பெறுவதாகவும், மற்றொன்று சாட்சியாக இருப்பதாகவும் 1.3.1 இல் கண்டோம். இதில் அனுபவங்களைப் பெறுகின்ற ஆன்மாவாகக் கூறப்பட்டது உயிர், சாட்சியாக இருப்பது ஆன்மா. உடம்பு என்ற கருவியைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போகும்போது உயிர் அதனை விட்டுவிடுகிறது. இதனையே நாம் மரணம் என்கிறோம். எனவே மரணம் என்பது உடம்பிற்கு மட்டுமே. மனம், பிராணன் போன்ற தொகுதிகளின் சேர்க்கையாகிய உயிரின் பயணம் தொடர்கிறது. ஆன்மா இவை அனைத்திற்கும் சாட்சியாக நிற்கிறது.

மரணத்திற்குப் பின்னால் என்ன எஞ்சும்?

4. அஸ்ய விஸ்ரம்ஸமானஸ்ய சரீரஸ்தஸ்ய தேஹின
தேஹாத் விமுச்யமானஸ்ய கிமத்ர பரிசிஷ்யதே ஏதத் வை தத்

சரீரஸ்தஸ்ய-உடம்பில் இருக்கின்ற; அஸ்ய-இந்த; தேஹின-உயிர்; தேஹாத்-உடம்பிலிருந்து; விஸ்ரம்ஸமானஸ்ய-விடுபட்டு; விமுச்யமானஸ்ய-வெளியேறிவிட்டால்; அத்ர-இங்கே; கிம்-என்ன பரிசிஷ்யதே-எஞ்சும்.

பொருள் : உடம்பில் இருக்கின்ற இந்த உயிர் உடம்பிலிருந்து விடுபட்டு வெளியேறிவிட்டால் இங்கே என்ன எஞ்சும்? அதுவே நீ கேட்ட பொருள்.
உடம்பு வீழ்ந்துவிட்டது, உயிர் வெளியேறி விட்டது. எஞ்சுவது எதாவது உண்டா? அதாவது, இந்த இரண்டின் மாற்றங்களால் பாதிக்கப்படாத ஏதாவது நம்மில் உள்ளதா என்பது கேள்வி. உள்ளது, அதுவே ஆன்மா. அதுவே நீ தியானத்தின் ஒரு முக்கியமான பகுதி இது. மரணத்தையே தியானிக்கத் தூண்டுகிறது இந்தப் பகுதி. சுவாமி விவேகானந்தரின் உரையாடலில் வருகின்ற ஓர் அற்புதமான பகுதியை இந்த இடத்தில் சிந்திப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

சுவாமிஜி : வாழ்வில் மிக மேலான உண்மை எது வென்று சொல்லுங்கள், பார்க்கலாம்.
(யாரும் பதில் சொல்லாதது கண்ட சுவாமிஜி தொடர்ந்தார்)

இதோ பாருங்கள், நாம் அனைவரும் இறந்துவிடுவோம் இந்த உண்மையை எப்போதும் உங்கள் மனத்தில் கொள்ளுங்கள். அப்போது மட்டுமே உங்கள் மனத்திலிருந்து அற்பத்தனம் விலகும்; செயல்திறன் உருவாகும்; உடலும் உள்ளமும் புத்தெழுச்சி பெறும்! உங்களுடன் தொடர்பு கொள்பவர்களும் தாங்கள் நன்மை அடைந்ததாகக் கருதுவார்கள்.

ஒருவர்: ஆனால் சுவாமிஜி, மரணத்தைப்பற்றி நினைப்பதால் மனம் உடைந்து சோகம் உண்டாகாதா?

சுவாமி: உண்டாகும். முதலில் மனமுடைந்து சோகமும் துயர எண்ணங்களும் எழத்தான் செய்யும். சில நாட்கள் அப்படியே கழியட்டும். பின்னர் இதயத்தில் புதிய வலிமை புகுவதைக் காண்பீர்கள். எப்போதும் மரணத்தைப்பற்றி நினைப்பது உங்களுக்கு ஒரு புதிய வாழ்வைத் தந்து உங்களை மேன்மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது; வெறுமை, வெறுமை அனைத்தும் வெறுமை என்பதன் உண்மையை உங்கள் கண்முன் ஒவ்வொரு கணமும் கொண்டுவருகிறது. நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் கடந்து செல்லட்டும். உங்கள் ஆன்மா சிங்கத்தின் வலிமையுடன் விழித்தெழுவதைக் காண்பீர்கள். உள்ளேயிருந்த சிறிய ஆற்றல், பேராற்றலாக மாறுவதை உணர்வீர்கள். எப்போதும் மரணத்தை நினையுங்கள்.

மாற்றங்களால் ஆன்மா ஏன் பாதிக்கப்படுவதில்லை?

5. ந ப்ராணேன நாபானேன மர்த்யோ ஜீவதி கச்சன
இதரேண து ஜீவந்தி யஸ்மின் ஏதாவுபாச்ரிதௌ

கச்சன- எந்த; மர்த்ய-மனிதனும்; ப்ராணேன-பிராணனாலோ; அபானேன-அபானனாலோ; ந ஜீவதி-வாழ்வதில்லை; ஏதௌ-இவை; யஸ்மின்-யாரை; உபாச்ரிதௌ-ஆதாரமாகக் கொண்டுள்ளனவோ; இதரேணது-அனைத்தும்; ஜீவந்தி-வாழ்கின்றன.

பொருள் : எந்த மனிதனும் பிராணனாலோ அபானனாலோ வாழ்வதில்லை. எதனை ஆதாரமாகக்கொண்டு இந்தப் பிராணனும் அபானனும் இயங்குகின்றனவோ, அதனை ஆதாரமாகக் கொண்டே அனைத்தும் வாழ்கின்றன.

பிராணனும் அபானனும் முறையே உள்மூச்சு மற்றும் வெளிமூச்சிற்குக் காரணமானவை. எனவே மூச்சு விடுவது என்ற செயல் இங்கே உணர்த்தப்படுகிறது. மூச்சு விடுவதால் மட்டும் மனிதன் உயிர்வாழ்ந்து விடுவதில்லை; ஏனெனில் வேறு ஏதோ இருப்பதால்தான் மூச்சு விடுவதே நடை பெறுகிறது என்கிறது இந்த மந்திரம்.

விளக்கு, விசிறி போன்ற மின்சாதனங்கள் மின்சாரத்தால் இயங்குகின்றன. விளக்கை நிறுத்துவதோ, விளக்கிருந்த இடத்தில் விசிறியைப் பொருத்துவதோ மின்சாரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மின்சாதனங்கள் மின்சாரத்தைச் சார்ந்துள்ளனவே தவிர மின்சாரம் சாதனங்களைச் சார்ந்தது அல்ல. அதுபோல் பிராணனும் அபானனும் மட்டுமல்ல அனைத்தும் ஆன்மாவைச் சார்ந்துள்ளன. ஆன்மா எதையும் சார்ந்திருக்கவில்லை. எனவே உடம்பு, உயிர் என்று எதில் நிகழும் மாற்றமும் அதனைப் பாதிப்பதில்லை.

மரணத்திற்குப் பின்னால் உயிரின் நிலை: 6-7

6. ஹந்த த இதம் ப்ரவக்ஷ்யாமி
குஹ்யம் ப்ரஹ்ம ஸனாதனம்
யதா ச மரணம் ப்ராப்ய ஆத்மா பவதி கௌதம

கௌதம-நசிகேதா; ஹந்த-நல்லது; மரணம்-மரணத்தை; ப்ராப்ய-அடைந்து; ஆத்மா-உயிர்; யதா-எவ்வாறு; பவதி-ஆகுமோ; ச-மேலும்; குஹ்யம்-ரகசியமானதும்; ஸனாதனம்-அழிவற்றதுமான; ப்ரஹ்மம்-ஆன்மாபற்றியும்; இதம்-இப்போது; தே-உனக்கு; ப்ரவக்ஷ்யாமி-சொல்கிறேன்.

பொருள் :  நசிகேதா! நல்லது. மரணத்திற்குப் பின்னால் உயிர் என்ன ஆகும் என்பது பற்றியும், ரகசியமானதும் அழிவற்றதுமான ஆன்மா பற்றியும் உனக்கு இப்போது சொல்கிறேன்.

7. யோனிமன்யே ப்ரபத்யந்தே சரீரத்வாய தேஹின
ஸ்தாணுமன்யே னுஸம்யந்தி யதா கர்ம யதா ச்ருதம்

அனு-பிறகு; அன்யே-சில; தேஹின-உயிர்கள்; சரீரத்வாய-உடம்பைப் பெறுவதற்காக; யோனிம்-யோனியை; ப்ரபத்யந்தே-அடைகின்றனர்; அன்யே-சிலர்; ஸ்தாணும்-தாவரம் போன்றவற்றை; ஸம்யந்தி-அடைகின்றனர்; யதா கர்ம-வினைப்பயன் எப்படியோ; யதா ச்ருதம்-அனுபவம் எப்படியோ.

பொருள் : மரணத்திற்குப்பிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர்; சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப்பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்.

உயிர்கள் பல்வேறு பிறவிகளை எடுத்து கடைசியில் நிறைநிலையை அடைகின்றன என்பது மறுபிறவிக் கோட்பாடு. வாழும் காலத்தில் எத்தகைய செயல்களைச் செய்கிறோமோ, என்னென்ன அனபவங்களைப் பெறுகிறோமோ அதற்கேற்ப அடுத்த பிறவி வாய்க்கிறது. சாதாரணமாக வாழ்கின்ற ஒருவன் மீண்டும் மனிதப் பிறவியைப் பெறுகின்றான். ஏராளமாக நற்செயல்கள் செய்பவன் அதிக புண்ணியம் பெற்று தேவலோகத்தில் வாழ்கிறான். தீமைகள் செய்பவன் மிருகங்களாக தாவரமாகப் பிறக்கிறான்.

எனவே எதைச் செய்கிறோம் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எத்தகைய எண்ணங்களை நம் மனத்தில் நினைக்கிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் எண்ணங்களே செயலாக உருவெடுக்கின்றன. செயலும் அனுபவமும், அவற்றிற்கேற்ப அடுத்த பிறவியும் உயர்வானதாக அமையும்.

ஆன்மா பாதிக்கப்படுவதில்லை

8. ய ஏஷ ஸுப்தேஷு ஜாகர்த்தி
காமம் காமம் புரு÷ஷா நிர்மிமாண
ததேவ சுக்ரம் தத் ப்ரஹ்ம ததேவாம்ருதமுச்யதே
தது நாத்யேதி கச்சன ஏதத் வை தத்

ஏஷ - இவை; ஸுப்தேஷு-தூங்கும்போது; காமம் காமம்-விருப்பமானவற்றை; நிர்மிமாண-உருவாக்கிய படி; ய-எது; ஜாகர்த்தி-விழித்திருக்கிறதோ; தத் ஏவ-அதுவே; சுக்ரம்-தூயது; தத்-அதுவே; ப்ரஹ்ம-ஆன்மா; தத் ஏவ-அதுவே; அம்ருதம்-மரணமற்றது; உச்யதே-சொல்லப்படுகிறது; தஸ்மின்-அதனிடமே; ஸர்வே-எல்லா லோகா:-உலகங்களும்; ச்ரிதா-சார்ந்திருக்கின்றன; தத்-அதனை; கச்சன-யாரும்; ந அத்யேதி-கடந்திருக்கவில்லை.

பொருள் : புலன்கள் தூங்கும்போது தனக்கு விருப்பமானவற்றை உருவாக்கியபடி எது விழித்திருக்கிறதோ அதுவே தூய மரணமற்ற ஆன்மா என்று சொல்லப்படுகிறது. எல்லா உலகங்களும் அதனையே சார்ந்திருக்கின்றன. அதனைக் கடந்தவனாக யாரும் இல்லை.

வாழ்க்கையின் எத்தனையோ புதிர்களுள் தூக்கமும் கனவும் முக்கியமான இடம் வகிப்பவை. அன்று முதல் இன்றுவரை இவைபற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இந்த மந்திரம் கனவுபற்றி கூறுகிறது.

உடம்பும் மனமும் கருவிகள். அவற்றிற்கு ஓய்வு தேவை. உடம்பு ஓய்வெடுப்பது தூக்கம் எனப்படுகிறது. அப்போதும் மனம் தொடர்ந்து செயல்படுகிறது. அதுவே கனவு.
அங்கே தேரில்லை, இழுக்க மிருகங்கள் இல்லை, சாலைகள் இல்லை, அங்கே இன்பம் இல்லை, களிப்பு இல்லை, ஆனந்தம் இல்லை, அங்கே குளம் இல்லை, ஏரி இல்லை, நதிகளும் இல்லை, அவன் அனைத்தையும் உருவாக்குகிறான் ஏனெனில் அவனே அனைத்தையும் உருவாக்குபவன் ( ந தத்ர ந ரதயோகா பந்தானோ பவந்தி, அத ரதான் ரதயோகான் பத: ஸ்ருஜதே; ந தத்ர ஆனந்தா முத: ப்ரமுதோ பவந்தி, அத ஆனந்தான் முத: ப்ரமுத; ஸ்ருஜதே; ந தத்ர வேசாந்தா: புஷ்கரிண்ய: ஸரவந்த்யோ பவந்தி, அத வேசாந்தான் புஷ்கரிணீ: ஸ்ரவந்தீ: ஸ்ருஜதே: ஸ ஹி கர்த்தா-பிருஹதாரண்யக உபநிஷதம், 4.3.10.) என்று கனவுலகத்தைப்பற்றி பிருஹதாரண்யக உபநிஷதம் கூறுகிறது. உடம்பு ஓய்வெடுக்கும்போது மனம் செயல்படுகின்ற நிலை இது. விழிப்புநிலையில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக இது அமையலாம்; சிலவேளைகளில் ஆசைகளில் வெளிப்பாடாக இருக்கலாம்; சிலவேளைகளில் எதிர்காலத்தைப்பற்றி அறிவிப்பாகவும் இருக்கலாம். மனம் இங்கே தனக்கென்று ஓர் உலகை உருவாக்கி இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது.

இன்னும் ஆழ்ந்த நிலையில் மனமும் ஓய்வெடுக்கிறது. அது ஆழ்ந்த தூக்கம். ஆழ்ந்த தூக்கத்தின் போதும் நம்மில் யாரோ ஒருவர் விழித்திருந்து நாம் ஆழ்ந்து தூங்குவதைக் கவனிக்கிறார். அதனால்தான் விழித்ததும், நான் நன்றாகத் தூங்கினேன் என்று சொல்ல முடிகிறது. ஆழ்ந்த தூக்கத்திலும் சரி, கனவிலும் சரி, விழிப்பு நிலையிலும் சரி அந்த ஒருவர் விழித்திருப்பதால்தான் அனைத்தையும் நாம் உணர முடிகிறது. அந்த ஒருவரே ஆன்மா. அதுவே நீ என்று எமதர்மன் கூறுகிறான்.
ஆன்மா இருப்பதால்தான் நாம் மூன்று நிலைகளிலும் மாறிமாறி சஞ்சரிக்க முடிகிறது. இந்த நிலைகளில் மூலமாகத் தான் நாம் பல்வேறு உலகங்களையும் பல்வேறு விதமாக அனுபவிக்க முடிகிறது. அதனால்தான் எல்லா உலகங்களும் ஆன்மாவைச் சார்ந்திருப்பதாகக் கூறப்பட்டது.

இவ்வாறு மூன்று நிலைகளிலும் சாட்சியாக நிற்கின்ற பொருளே நாம் என்பதை உணரும்போது உடம்பின் மாற்றங்களோ, மனத்தின் செயல்பாடுகளோ நம்மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை. உடம்பின் மாற்றமாகிய மரணமும் நம்மைப் பாதிக்காத நிலையை நாம் அடைந்து விடுகிறோம் அதுவே நீ தியானப் பகுதி இது.

ஆன்மாவின் பாதிக்கப்படாத தன்மை மூன்று உவமைகள்: 9-11

மரணத்திற்குப் பின்னால் உடம்பு வீழ்கிறது, உயிர் பயணத்தைத் தொடர்கிறது; ஆன்மா எந்தப் பாதிப்புமின்றி அனைத்து மாற்றங்களுக்கும் சாட்சியாக எப்போதும் போல் இருக்கிறது. தொடரும் மூன்று மந்திரங்களில் இது மூன்று உவமைகள்மூலம் விளக்கப்படுகிறது.

9. அக்னிர்யதைகோ புவனம் ப்ரவிஷ்ட்டோ
ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பபூவ
ஏகஸ்ததா ஸர்வ பூதாந்ராத்மா
ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பஹிச்ச

ஏக-ஒன்றான; அக்னி-அக்கினி; புவனம்-உலகில்; ப்ரவிஷ்ட்ட-வந்து; யதா-எவ்வாறு; ரூபம் ரூபம்-பல்வேறு பொருட்களில்; ப்ரதிரூப-அந்தந்த வடிவத்தில்; பபூவ-விளங்குகிறதோ; ததா-அவ்வாறே; ஸர்வ பூத அந்தராத்மா-எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா; ஏக-ஒன்றாக இருந்தாலும்; ரூபம் ரூபம்-பல்வேறு உயிரினங்களில்; ப்ரதிரூப-அந்தந்த வடிவத்தில்; பஹி: ச-வெளியிலும்.

பொருள் :  ஒன்றான அக்கினி உலகில் வந்து எவ்வாறு பல்வேறு பொருட்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ அவ்வாறே எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா ஒன்றாக இருந்தாலும் பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில், அந்த வடிவங்களுக்கு வெளியிலும் திகழ்கிறது.

பஞ்ச பூதங்களாகிய பூமி, தண்ணீர், அக்கினி, காற்று, ஆகாசம் என்ற ஐந்து அடிப்படைப் பொருட்களின் சேர்க்கையால் ஆகியது உலகம். இந்த ஐந்தும் உலகின் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வோர் இடத்திலும் நிறைந்துள்ளது. அவ்வாறு அக்கினியும் எல்லா இடங்களிலும் உள்ளது. ஆனால் கட்டை, விறகு போன்ற எரிப்பொருட்களில் அது அதிகமாக வெளிப்படுகிறது. ஒரு கட்டையில் எந்த இடத்தைப் பற்ற வைத்தாலும் பற்றிக்கொள்கிறது. அதாவது அக்கினி அந்தக் கட்டை முழுவதிலும் வியாபித்துள்ளது. அந்தப் பொருள் முழுவதும் வியாபிக்கின்ற தன்மையே இங்கு அந்த வடிவத்தில் விளங்குகிறது என்று கூறப்பட்டது.

அக்கினி ஒரு விறகில் இருக்கின்ற அதே வேளையில் எங்கும் நிறைந்ததாகவும் உள்ளது. எனவே விறகிலோ கட்டையிலோ ஏற்படும் மாற்றங்கள் அக்கினியைப் பாதிப்பதில்லை. அதுபோலவே ஆன்மாவும்.

அடுத்த உவமையில் இது இன்னும் தெளிவாக விளங்கும்

10. வாயுர்யதைகோ புவனம் ப்ரவிஷ்ட்டோ
ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பபூவ
ஏகஸ்ததா ஸர்வ பூதாந்தராத்மா
ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பஹிச்ச

ஏக-ஒன்றான; வாயு-காற்று; புவனம்-உலகில்; ப்ரவிஷ்ட்ட-வந்து; யதா-எவ்வாறு; ரூபம் ரூபம்-பல்வேறு பொருட்களில்; ப்ரதிரூப-அந்தந்த வடிவத்தில்; பபூவ-விளங்குகிறதோ; ததா-அவ்வாறே; ஸர்வ பூத அந்தராத்மா-எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா; ஏக-ஒன்றாக இருந்தாலும்; ரூபம் ரூபம்-பல்வேறு உயிரினங்களில்; ப்ரதிரூப-அந்தந்த வடிவத்தில்; பஹி: ச-வெளியிலும்.

பொருள் : ஒன்றான காற்று உலகில் வந்து எவ்வாறு பல்வேறு பொருட்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ அவ்வாறே எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா ஒன்றாக இருந்தாலும் பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ அதேவேளையில் அந்த வடிவங்களுக்கு வெளியிலும் நிகழ்கிறது.

குடம் ஒன்று உள்ளது. குடத்திற்கு உள்ளேயும் காற்று உள்ளது. வெளியிலும் காற்று உள்ளது. குடத்திற்கு உள்ளே உள்ள காற்று குடத்தின் வடிவத்தைப் பெறுகிறது. குடத்தின் வடிவங்களும் அளவுகளும் மாறுபடுவதற்கு ஏற்ப உள்ளே உள்ள காற்றின் வடிவமும் அளவும் மாறுபடுகிறது. குடத்தை உடைத்துவிட்டால் காற்றுக்கு குடத்தின் வடிவம் போய்விடுகிறது; அது எங்கும் நிறைந்த தன்மையை அடைந்துவிடுகிறது. அதுபோல் ஆன்மாவும் எங்கும் நிறைந்தது. அதேவேளையில் ஒவ்வோர் உயிரினங்களிலும் அந்தந்த வடிவத்தைப் பெற்று விளங்குகிறது, எவ்வாறு காற்று குடத்தால் பாதிக்கப்படுவதில்லையோ அவ்வாறே ஆன்மாவும் உடம்பால் பாதிக்கப்படுவதில்லை.

அந்தந்த வடிவம் என்று சொல்லும்போது, 2.1.12.13-இல் கண்ட உவமையை நினைவில்கொள்ள வேண்டும். ஆன்மா பெருவிரல் அளவில் இருப்பதாக அங்கே கூறப்பட்டது. ஆனால் அது ஓர் ஒளி என்பதால் தான் நம்மால் அதனைப் புரிந்துகொள்ள முடிந்தது. இங்கும் ஒவ்வோர் உடம்பில் ஆன்மா ஒவ்வொரு வடிவத்தில் இருப்பதாகக் கூறும்போது அதனை ஓர் ஒளியாக ஒளிபோல் எங்கும் பரவியிருப்பதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும், மாறாக, ஆன்மா ஓர் மனித வடிவிலோ தாவர வடிவிலோ மாறுகிறது என்பதல்ல.

11. ஸூர்யோ யதா ஸர்வலோகஸ்ய சக்ஷú
ந லிப்யதே சாக்ஷúஷைர் பாஹ்யதோஷை
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தராத்மா
ந லிப்யதே லோகது கேன பாஹ்ய

ஸூர்ய-சூரியன்; ஸர்வலோகஸ்ய-எல்லோருடைய; சக்ஷú-காட்சிக்கு ஆதாரமானவன்; சாக்ஷúஷை-பார்வை சம்பந்தப்பட்ட; பாஹ்ய தோஷை-புறக் குறைபாடுகளால்; யதா-எவ்வாறு; ந லிப்யதே-பாதிக்கப்படுவதில்லையோ; ததா-அவ்வாறே; ஏக-ஒன்றான; ஸர்வ பூத அந்தராத்மா-எல்லோரிலும் இருக்கின்ற ஆன்மா; லோக து: கேன-உலகின் துக்கங்களால்; ந லிப்யதே-பாதிக்கப்படுவதில்லை; பாஹ்ய-கடந்தது.

பொருள் : எல்லோருடைய காட்சிக்கும் ஆதாரமாக இருப்பவன் சூரியன். ஆனால் பார்வைக் கேளாறுகளோ மற்ற புறக் குறைபாடுகளோ சூரியனைப் பாதிப்பதில்லை. அதுபோல் ஒன்றேயான ஆன்மா எல்லோரிலும் இருந்தாலும் உலகின் துக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில் அது அனைத்தையும் கடந்தது.

இங்கே சூரியன் என்பது ஒளியின் சின்னமாகக் கூறப்படுகிறது. எதைக் காண வேண்டுமானாலும் ஒளி வேண்டும். ஒளியின்றி எதையும் காண முடியாது. காண்பவன் இருந்தாலும், பொருள் இருந்தாலும் ஒளி இல்லாவிட்டால் பார்க்க முடியாது. அதனால்தான் சூரியன் காட்சிக்கு ஆதாரமானவனாகக் கூறப்படுகிறான்.

ஒவ்வொரு கண்ணின் பார்வைக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது சூரியன். என்றாலும் எந்தக் கண்களில் உள்ள குற்றமும் அதனை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. காமாலை நோயாளி எல்லாவற்றையும் மஞ்சள் நிறமாகக் காண்கிறேன். அவனது பார்வைக்கும் ஆதாரம் சூரியன்தான். ஆனால் இந்தக் குகை சூரியனைப் பாதிப்பதில்லை. இதைப் போலவே ஒன்றேயான இந்தப் பரம்பொருள் எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருந்தாலும் வெளியே உள்ள தூய்மையோ தூய்மையின்மையோ அதைப் பாதிப்பதில்லை. என்று விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்.

அதுபோலவே புறக் குறைபாடுகளும். ஒரே சூரியன் கங்கையிலும் பிரதிபலிக்கிறது, சாக்கடையிலும் பிரதிபலிக்கிறது. இந்த வேறுபாடு எந்த விதத்திலாவது சூரியனைப் பாதிக்குமா? இல்லை. அதுபோல் நல்லவர்-தீயவர், சிறியவர்-பெரியவர் என்று எல்லோரிலும் ஆன்மா இருந்தாலும் இந்த வேறுபாடுகளோ, அவர்கள் அனுபவிக்கின்ற சுகதுக்கங்களோ எதுவும் ஆன்மாவை பாதிப்பதில்லை. சூரியன் எல்லாக் காட்சிகளுக்கும் ஆதாரமாக இருந்தாலும் எவ்வாறு எந்தச் செயலிலும் பங்கு கொள்ளாமல் தனித்து நிற்கிறானோ அதுபோல் எல்லா செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக இருந்தாலும் ஆன்மா அவற்றைக் கடந்ததாக இருப்பதால் எந்தச் செயலும் அதனைப் பற்றுவதில்லை.

ஆன்ம அனுபூதி(12-15)

மரணத்தால் பாதிக்கப்படாததாக உள்ளது ஆன்மா. அந்த ஆன்மா நான் என்ற உண்மையை உணர முடியுமானால் அதுதான் பெரிய விஷயம். தவத்தாலும் ஆன்மீக சாதனைகள்மூலம் இந்த அனுபூதியைப் பெற வேண்டும்.

ஆன்ம அனுபூதியின் மகிமை : 12-13

12. ஏகோ வசீ ஸர்வபூதாந்தராத்மா
ஏகம் ரூபம் பஹுதா ய: கரோதி
தமாத்மஸ்தம் யேனுபச்யந்தி தீரா
தேஷாம் ஸுகம் சாச்வதம் நேதரேஷாம்

ஏக-ஒன்று; வசீ- அனைத்தையும் ஆள்வது; ஸர்வ பூத அந்தராத்மா-எல்லோரிலும் இருப்பது; ய-எந்த ஆன்மா; ஏகம் ரூபம்-ஒன்றேயான பொருள்; பஹுதா-பலவாக; கரோதி-செய்கிறதோ; ஆத்மஸ்தம்-இதயத்தில் உறைகின்ற; தம்-அந்த ஆன்மாவை; யே-எந்த; தீரா-விவேகிகள்; அனுபச்யந்தி அனுபூதியில் உணர்கிறார்களோ; தோஷம்-அவர்களுக்கே; சாச்வதம்-நிலையான; ஸுகம்-இன்பம்; ந இதரேஷாம்-மற்றவர்களுக்கு இல்லை.

பொருள் :  ஒன்றேயானதும், அனைத்தையும் ஆள்வதும், எல்லோரிலும் இருப்பதும், இதயத்தில் உறைவதும், ஒன்றாக இருந்தும் பலவாகத் தோன்றுவதுமான ஆன்மாவை அனுபூதியில் விவேகிகளுக்கே நிலைத்த இன்பம் உரித்தாகும்; மற்றவர்களுக்கு இல்லை.

இறைவனின் சக்தி மாயை எனப்படுகிறது, இதற்கு இரண்டு பண்புகளை நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன: ஒன்று இருப்பதை மறைப்பது; இரண்டு, இல்லாததை இருப்பதாகக் காட்டுவது (வேதாந்த சாரம், 51-54). உலகம், உயிர்கள் என்று அனைத்திலும் நிலவுவது ஒரே ஆன்மா, ஒரே உணர்வுப் பொருள். இந்த உண்மை மறைக்கப்பட்டு, உலகையும் மனிதர்களையும் உயிரினங்களையும் வெவ்வேறாக நாம் காண்கிறோம். இப்படி நமக்குக் காட்டுவது இறைவனின் சக்தியாகிய மாயை. அந்த இறைவனே ஆன்மாவாக நம் உடம்பில் உறைகிறார். ஆன்மாவை அனுபூதியில் உணர்பவன் நிலைத்த இன்பத்தைப் பெறுகிறான்; மற்றவர்கள் பெறுவதில்லை. வேறுபாட்டு உணர்வு இருக்கும்போது பயம் தவிர்க்க முடியாதது. ஆனால் ஒருமை உணர்வில் பயமோ துன்பமோ இல்லை. ஏனெனில் யார் யாரைக் கண்டு பயப்படுவது? யார் யாருக்குத் துன்பம் செய்வது? இருப்பது ஒன்றே அல்லவா! எனவே இதை உணர்ந்தவன் எப்போதும் இன்பத்தில் திளைத்திருக்கிறான். உணராதவனுக்கு அந்த வாய்ப்பு இல்லை.

13. நித்யோநித்யானாம் சேதனச் சேதனானாம்
ஏகோ பஹுனாம் யோ விததாதி காமான்
தமாத்மஸ்தம் யேனுபச்யந்தி தீரா
தேஷாம் சாந்தி சாச்வதீ நேதரேஷாம்

அநித்யானாம்-நிலையற்றவற்றில்; நித்ய-நிலையானவரும்; சேதனானாம்-உயிரினங்களில்; சேதன-உணர்வாக விளங்குபவரும்; பஹுனாம்-பன்மையில்; ஏக-ஒருமையானவரும்; காமான்-ஆசைகளை; விததாதி-நிறைவேற்றுபவரும்; ய-எந்த இறைவனோ; தம்-அவரை; ஆத்மஸ்தம்-இதயத்தில் உறைபவராக; யே-எந்த; தீரா-விவேகிகள்; அனுபச்யந்தி-அனுபூதியில் உணர்கிறார்களோ; தேஷாம்-அவர்களுக்கே; சாச்வதீ-நிலைத்த; சாந்தி-அமைதி; ந-இதரேஷாம்-மற்றவர்களுக்கு இல்லை.

பொருள் :  நிலையற்றவற்றில் நிலையானவரும், உயிரினங்களில் உணர்வாக விளங்குபவரும், பன்மையில் ஒருமையானவரும், ஆசைகளை நிறைவேற்றுபவருமான இறைவனை எந்த விவேகிகள் இதயத்தில் ஆன்மாவாக உறைபவராக அனுபூதியில் உணர்கிறார்களோ அவர்களுக்கே நிலைத்த அமைதி உரித்தாகும்; மற்றவர்களுக்கு இல்லை.

ஆன்ம அனுபூதி என்பது என்ன? : 14-15

ஆன்ம அனுபூதி, இறையனுபூதி, இறைக்காட்சி என்றெல்லாம் பொதுவாக நாம் கேள்விப்படுகிறோம், படிக்கிறோம். உண்மையில் அது என்ன என்பதுபற்றி யாராலும் சொல்ல முடியாது. ஏனெனில் அது ஆராய்ச்சிக்கோ விளக்கத்திற்கோ உரியது அல்ல; அது அனுபவத்திற்கு உரியது. இருப்பினும் ஆராய்ச்சி முயற்சிகள் தொடரவே செய்கின்றன. நசிகேதனும் இங்கே அதுபற்றி கேட்கிறான். எமதர்மன் சிறந்ததொரு பதிலை அதற்குக் கொடுக்கிறான்.

14. ததேததிதி மன்யந்தே நிர்தேச்யம் பரமம் ஸுகம்
கதம் நு தத் விஜானீயாம் கிமு பாதி விபாதி வா

அநிர்தேச்யம்-குறிப்பிட்டுக் சொல்ல முடியாத; பரமம்-மேலான; தத்-அந்த; ஸுகம்-அனுபூதி இன்பத்தை; ஏதத் இதி-நேரடியாக; மன்யந்தே-அனுபவிக்கின்றனர்; தத்-அந்த அனுபவம்; கிமு பாதி-ஒளிர்கிறதா; வா-அல்லது; விபாதி-ஒளிரச் செய்யப்படுகிறதா; கதம் நு-எவ்வாறு விஜானீயாம்-அறிய விரும்புகிறேன்.

பொருள் :  குறிப்பிட்டுச் சொல்ல முடியாததும் மேலானதுமான அந்த அனுபூதி இன்பத்தை நேரடியாக அனுபவிக்கின்றனர். அந்த அனுபவம் தானாக ஒளிர்கிறதா அல்லது வேறொன்றால் ஒளிரச் செய்யப்படுகிறதா? இதுபற்றி நான் அறிய விரும்புகிறேன்.

ஆன்ம அனுபூதி பெற்றதாக, இறைவனைக் கண்டதாக மகான்கள் பலரும் கூறியுள்ளனர். அது அகத்தே உணரப்பட்ட ஓர் அனுபவமா அல்லது புறப் பொருட்களைப் காண்பதுபோல் ஒரு புறக் காட்சியா என்பது நசிகேதனின் கேள்வி.

15. ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்
நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி
தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி

தத்ர-அங்கே; ஸூர்ய-சூரியன்; ந பாதி-ஒளிர்வதில்லை; சந்தர தாரகம்-சந்திரனும் நட்சத்திரங்களும்; ந-ஒளிர்வதில்லை; இமா-இந்த; வித்யுத-மின்னல்; ந பாந்தி-ஒளிர்வதில்லை; அயம்-இந்த; அக்னி-அக்கினி; குத-எங்கே; பாந்தம்-ஒளிர்கின்ற; தம்-அதனை; அனு ஏவ-அனுசரித்தே; ஸர்வம்-எல்லாம்; பாதி-ஒளிர்கின்றன; இதம் ஸர்வம்-இந்த அனைத்தும்; தஸ்ய-அதன்; பாஸா=ஒளியால்; விபாதி-ஒளிர்கின்றன.

பொருள் : அங்கே சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை; மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்கினி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன.

ஆன்ம அனுபூதி என்பது ஒரு புறக்காட்சி அல்ல என்று இங்கே கூறப்படுகிறது. அனைத்தையும் காண ஒரு விளக்கு தேவை. சூரியனைக் காண விளக்கு தேவையா? தேவையில்லை. ஏனெனில் சூரியனின் ஒளியால்தான் அனைத்தும் ஒளிர்கின்றன. அதுபோல் ஆன்ம ஒளியால்தான் நாம் அனைத்தையும் காண்கிறோம். உலகப் பொருட்களைக் காண்பதற்கு உதவுகின்ற சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அனைத்தும் பிரகாசிப்பது ஆன்ம ஒளியால்தான். எனவே ஆன்ம ஒளியைக் காட்ட இந்த ஒளிகளால் இயலாது.

பொதுவாக ஒளி, காட்சி என்றெல்லாம் படிக்கும்போது அது சாதாரணமாக நாம் காண்கின்ற ஒளியைப் போன்றது, அதைவிடப் பேரொளியானது என்றெல்லாம் எண்ணிக்கொள்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. பெட்ரோமாக்ஸ் விளக்கிலிருந்து வருகின்ற ஒளி போன்றதல்ல ஆன்ம ஒளி. அனைத்தையும் நாம் அறிந்துகொள்வது ஆன்ம ஒளியால் தான். அதன் காரணமாகவே அது ஒளி என்று கூறப்பட்டுள்ளது என்று இதனை விளக்குகிறார் ஸ்ரீரமண மகரிஷி. இந்த ஒளி ஒரு நிலையைக் குறிக்கிறது என்று கூறுகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்; இந்த நிலையை இருளுக்கும் ஒளிக்கும் இடைப்பட்ட நிலை எனலாம். இந்த ஒளி நாம் காண்கின்ற ஒளி அல்ல; பவுதீக ஒளி அல்ல என்கிறார் அவர்.

ஆன்ம அனுபூதி, இறையனுபூதி என்பது ஓர் அனுபவம்; உணர வேண்டியது. ஒரு புறக் காட்சி போல் அதனைக் காண முடியாது. அன்பு, இரக்கம், இன்பம் போன்றவற்றை யாரும் காண முடியாது; அனுபவிக்கவே முடியும். அதுபோல் ஆன்ம அனுபூதியையும் அனுபவிக்க முடியுமே தவிர காண முடியாது. இதையே ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம், உனது இந்தக் கண்ணினால் என்னைப் பார்க்க இயலாது. எனவே உனக்கு தெய்வீகக் கண்ணைத் தருகிறேன் (கீதை, 11.8)என்று கூறுகிறார்.

எனினும் மிக உயர்ந்த நிலைகளில் புறக் கண்களாலேயே இந்தக் காட்சிகளைக் கண்டதாக பல மகான்களின் வரலாறு தெரிவிக்கிறது. குறிப்பாக பகவான் ஸ்ரீராம கிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதா தேவி ஆகியோரின் வாழ்க்கையில் இதனை நாம் காண்கிறோம். அன்னையிடம் இதுபற்றி சீடர் ஒருவர் கேட்டபோது அன்னை, பொதுவாக இவை அகக் காட்சிகள்தான். ஆனால் ஒருமுறை நான் நேரடியாகவே கண்டேன் என்று பதில் கூறுனார்.

இதி காடக உபநிஷத த்விதீயாத்யாயே த்விதீயா வல்லீ

 
மேலும் கட உபநிஷதம் (மரணத்திற்கு பின்னால்) »
temple news
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது பாரதத் திருநாடு ... மேலும்
 
temple news
1.1  எல்லாம் உன்னுள் நசிகேதன்(1-5) கட உபநிஷதத்திற்கு ஒரு முன்னுரைபோல் அமைகிறது இந்த முதல் அத்தியாயம். ... மேலும்
 
temple news
1.2 பிரித்திறந்து வாழ்! மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை என்ன என்று கேட்டான் நசிகேதன். பலவிதங்களில் ... மேலும்
 
temple news
1.3 விழித்தெழு! உடம்பின் மாற்றங்களாலோ மனத்தின் மாற்றங்களாலோ பாதிக்கப்படாத ஆன்மா என்ற ஒன்று ... மேலும்
 
temple news
2.1 அதுவே நீ கட உபநிஷதத்தின் இரண்டாம் பகுதி ஆரம்பிக்கிறது. உயர் வாழ்விற்கான அடிப்படைகள் சிலவற்றை முதற் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar