பதிவு செய்த நாள்
30
ஜூலை
2019
02:07
மதுரை : ”ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் கலியுகம் துவக்கத்தில் தோன்றியவர் சபரிமலை ஐயப்ப சுவாமி. பிரம்மச்சரிய கோலத்தில் அருள்பாலிக்கும் ஐயப்பனின் புனிதம் காக்கப்பட வேண்டும்,” என, மதுரையில் நடந்த மாநாட்டில் செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் பேசினார்.
நதிகளின் புனிதம் காக்கவும், சுற்றுச்சூழல் மேம்பாடு காண மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் வைகை பெருவிழா ஜூலை24 புட்டுத்தோப்பில் துவங்கியது. சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ மாநாடு நேற்று (ஜூலை., 29ல்) நடந்தது.
தென் தமிழ்நாடு தலைவர் ராஜகோபால துரைராஜா தலைமை வகித்தார். வட தமிழ்நாடு தலைவர் ரத்தினம் முன்னிலை வகித்தார்.செண்டலங்கார செண்பக ஜீயர் பேசியதாவது: 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஐயப்ப சுவாமியின் மகிமைக்கு இவ்வுலகில் ஈடு இணை இல்லை. அப்படி இருக்கையில் ஐயப்ப சுவாமியை பிற சமுதாய வழிபாட்டு முறைகளுடன் ஒப்பிடக்கூடாது. அதை ஏற்றுக்கொள்ள இயலாது.
அவ்வாறு செய்வது பொய் பிரசாரமாகவே கருதப்படும் என்றார்.சுவாமிகள் ராமானந்தா, ஆத்மானந்தா, பந்தள மன்னர் வர்ம ராஜா, ஐயப்ப சேவா சமாஜ தேசிய நிர்வாகிகள் வினோத், துரை சங்கர், சேகர், ராஜன், ஆடல் அரசன் பங்கேற்றனர். மாநில பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.