பதிவு செய்த நாள்
01
ஆக
2019
02:08
திருப்பூர்:ஆடி அமாவாசை தினமான நேற்று (ஜூலை., 31ல்), திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆடி அமாவாசை தினத்தையொட்டி, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள அனைத்து கோவில் களிலும், சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில், போலீஸ் லைன் மாரியம்மன், வாலிபாளையம் மாகாளியம்மன் கோவில் உட்பட, அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
முன்னோர்களுக்கு, ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆடி மாதம் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி, நேற்று (ஜூலை., 31ல்) அதிகாலை முதல், மதியம் வரை, மறைந்த முன்னோர்களுக்கு, தர்ப்பனம் கொடுத்து மரியாதை செலுத்தினர். திருப்பூர் ராகவேந்திரர் கோவில், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் வளாகம், நொய்யல் ஆற்றங்கரைகளில், தங்கள் குடும்பத்தை சேர்ந்த மறைந்த முன்னோர்களுக்கு, ஆண்கள் தர்ப்பனம் கொடுத்தனர்.
* அவிநாசியிலுள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் மற்றும் பல்லடம், பொங்கலுார், வெள்ளகோவில் ஆகிய வட்டாரத்திலுள்ள கோவில்களிலும், நேற்று (ஜூலை., 31ல்) ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு, முன்னோர் வழிபாடு நடந்தது.
* காங்கயம், சிவன்மலை சுப்ரமணியசாமி கோவிலில், காலை 5:00 மணிக்கு கோவில் நடை திறந்து, கோமாதா பூஜை நடந்தது. பின், ஆடி விழா பூஜை செய்யப்பட்டது.சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. மதியம் உச்சிகால பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மலையை சுற்றி வந்து அருள் பாலித்தார்.