பதிவு செய்த நாள்
01
ஆக
2019
02:08
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர உற்சவத்தின் தேர் திருவிழா, நேற்று (ஜூலை., 31ல்) காலை நடந்தது.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரை திரு விழாவுக்கு பின், பிரதான விழாவாக நடைபெறுவது, ஆடிப்பூரம். இந்தாண்டு, ஆடிப்பூர விழா, 25ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும், காலை, இரவில், தொட்டி, அலங்கார விமானம், அதிகார நந்தி, ரிஷப, யானை உள்ளிட்ட வாகனங்களில், அம்மன் எழுந்தருளி, வீதியுலா வருகிறார்.
முக்கிய விழாவான, தேர் திருவிழா, நேற்று (ஜூலை., 31ல்) காலை நடந்தது. அலங்கரிக்கப் பட்ட தேரில், திரிபுரசுந்தரி அம்மன் எழுந்தருளி, மாடவீதியில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 4ம் தேதி, திருக்கல்யாணம் வைபவம், மஹா அபிஷேகம், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு விமரிசையாக நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை, உபயதாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.