1,200 ஆடு, 2 ஆயிரம் கோழியை திண்டுக்கல்லில் விடிய விடிய சமபந்தி விருந்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2019 01:08
திண்டுக்கல், ஆக.7–திண்டுக்கல் முத்தழகுபட்டி செபஸ்தியார் ஆலய திருவிழாவில் 1,200 ஆடு கள், 2 ஆயிரம் கோழிகளை சமைத்து விடிய விடிய சமபந்தி விருந்து நடந்தது.
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. ஆக.4ல் இங்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் (ஆக.5) புனிதர்களின் தேர் பவனி நடந்தது. நேற்று (ஆக.6) காணிக்கை பவனி நடந்தது.
காலை 8:00 மணி முதல் பல்வேறு சங்கங்கள், அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் அரிசி, ஆடு, கோழிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
மாலை 5:00 மணி வரை 1,200 ஆடுகள், 2 ஆயிரம் கோழிகள் காணிக்கையாக வந்தன. இவற்றை மெகா சைஸ் பாத்திரங்களில் சமைத்து, இரவு 7:00 மணி முதல் இன்று (ஆக.7) காலை 5:00 மணி வரை விடிய விடிய சமபந்தி விருந்து நடந்தது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராம மக்கள் இதில் பங்கேற்று விருந்து உண்டனர்.
இன்று (ஆக.7) காலை புனிதர்களின் தேர் பவனி, மாலையில் நன்றி வழிபாடு நடக்கிறது. ஊர் முக்கியஸ்தர்கள் கூறியது: நேர்த்தி கடனாக வந்த அரிசி, ஆடு, கோழியை சமைத்து விருந்து வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் கலந்து கொண்டனர். யாருக்கும் உணவு இல்லை என்று சொல்லாத அளவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டது’ என்றனர்.