பதிவு செய்த நாள்
09
ஆக
2019
12:08
சென்னை : கம்பன் கழகத்தின், 45வது ஆண்டு விழா, நாளை (ஆக., 10ல்) துவங்கி, மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
சென்னை கம்பன் கழக விழா, நாளை துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. இது குறித்து, கம்பன் கழக தலைவர், ஆர்.எம்.வீரப்பன் கூறியதாவது:சென்னை கம்பன் கழகத்தின், 45ம் ஆண்டு விழா, இம்மாதம், 9,10,11 ஆகிய தேதிகளில், மயிலாப்பூர் ஏ.வி.எம்., ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடக்கிறது. நாளை (ஆக., 10ல்) மாலை, 5:00 மணிக்கு துவங்கும், இவ் விழாவில், தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளும், மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.தொடர்ந்து, தமிழ் அறிஞர்களின் சிறப்புரை இடம் பெறும். இரண்டாம் நாள், பட்டி மன்றம், மாணவர் அரங்கம், உரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிறைவு நாளில், இசை உரை, கவியரங்கம், உரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இரண் டாம் மற்றும் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள், காலை, 9:00 மணிக்கு துவங்கும்.கம்பன், வடமொழி இலக்கியமான ராமாயணத்தை, தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ற வகையில், பெயர்களை மாற்றியும், சம்பவங்களை மேம்படுத்தியும் தந்துள்ளார்.கம்பரை அறிந்து கொள்ள, இந்த கம்பன் விழா பெரிதும் உதவும். இதில், மாணவர்களும், இளைஞர்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.
என்னை, 92 வயதிலும், சுறுசுறுப்பாகவும், நற்சிந்தனையோடும் இயக்கிக் கொண்டிருப்பது, கம்ப ராமாயணம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் தான்.அப்படிப்பட்ட அருமருந்தான தமிழை சுவைக்க, கம்பன் கழக விழா நல்ல விருந்தாகும். இதற்கு, பல சான்றோர் தொடர்ந்து உதவி வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.