திருநெல்வேலி, : சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில், நேற்று மாலை நடந்த ஆடித்தபசு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில், ஆடித்தபசு விழா ஆக. 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்பாள் ரதவீதி உலா நடந்தது. 9ம் திருநாளான ஆக. 11ல் தேரோட்டம் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசுக் காட்சி நேற்று நடந்தது. நேற்று மாலையில் சுவாமி சங்கர நாராயணர், வெள்ளி ரிஷபவாகனத்தில் தெற்குரத வீதி தபசு பந்தலை அடைந்தார். தபசு மண்டபத்தில் கோமதி அம்பாள் ஒற்றைக்காலில் தவம் செய்யும் கோலத்துடன் தங்கச்சப்பரத்தில் தவசு பந்தலுக்கு வந்தார். சுவாமியை, அம்பாள் மூன்று முறை வலம் வந்தார், பிறகு சுவாமி, அம்பாளுக்கு பட்டு, பரிவட்டம், மாலை மாற்றும் வைபவம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு கோமதி அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். பக்தர்கள் சங்கரா, நாராயணா.. என பக்தி கோஷங்களை எழுப்பினர். இரவு 12:00 மணிக்கு சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி மீண்டும் தபசு பந்தலுக்கு வந்து அம்பாளுக்கு சங்கரலிங்கமாக காட்சி கொடுத்த இரண்டாம் தவசுக்காட்சி நடந்தது.