பதிவு செய்த நாள்
29
மார்
2012
11:03
சத்தியமங்கலம்: சிக்கரசம்பாளையம் கிராமத்தில் பண்ணாரி மாரியம்மன் நேற்று காலை வீதி உலா நடந்தது. சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பண்ணாரி மாரியம்மன் சப்பரத்தில் வீதியுலா புறப்பட்டு, சிக்கரசம்பாளையத்துக்கு நேற்று காலை வந்தார். அங்குள்ள கிராமங்களில் நேற்று முழுவதும் வீதி உலா நடந்தது. பக்தர்கள், "மாரியம்மா, மாரியம்மா என, கோஷமிட்டு சப்பரத்தில் வந்த மாரியம்மனுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றியும் தேங்காய், பழம் வைத்தும் வணங்கினர். பக்தர்கள், தங்கள் குழந்தைகளுடன் தரையில் படுத்து வணங்கினர். மாலை சிக்கரசம்பாளையத்தில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு புதூர் மாரியம்மன் கோவிலில் தங்கினார். இன்று வெள்ளியம்பாளையத்தில் வீதி உலா முடித்துவிட்டு மாலை கொத்தமங்கலம் வழியாக இரவு தொட்டம்பாளையம் சென்று, அங்குள்ள வேணுகோபால் ஸ்வாமி கோவிலில் தங்குகிறது. பண்ணாரி மாரியம்மன் சப்பரத்தில் வீதி உலா செல்லும்போது மலைவாழ் மக்கள் பீனாச்சி வாத்தியம் மற்றும் தாரை, தப்பட்டையுடன் சப்பரத்தின் முன்னால் சென்றனர். நாளை வெள்ளியம்பாளையம் புதூர் கிரமாத்தில் ஒவ்வொறு வீதியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு, இரவு அக்கரைதத்தப்பள்ளி மாரியம்மன் கோவிலில் தங்குகிறார்.