பதிவு செய்த நாள்
18
ஆக
2019
12:08
சபரிமலை, :கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான சபரிமலை, மாளிகைப்புறத்திற்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சபரிமலையில் மேல்சாந்தியின் பதவி காலம் ஒரு ஆண்டு. நேர்முக தேர்வில் வெற்றி பெற்றவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். கடந்த ஆண்டு வரை இந்த குலுக்கல் தேர்வு ஐப்பசி முதல் தேதி நடந்து வந்தது. தற்போது அது ஆவணி முதல் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கேரள பஞ்சாங்க முறைப்படி கேரளாவில் நேற்று ஆவணி முதல் தேதி என்பதால் நேற்று காலை 8:00 மணிக்கு ஐயப்பன் மூலஸ்தானம் முன்பு குலுக்கல் தேர்வு நடந்தது. பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் மாதவ் கே. வர்மா சபரிமலைக்கும், காஞ்சனா வர்மா மாளிகைப்புறத்துக்கும் துண்டு சீட்டுகளை எடுத்தனர். இதில் சபரிமலை மேல்சாந்தியாக மலப்புறம் மாவட்டம் தரூரை சேர்ந்த எ.கே. சுதீர் நம்பூதிரியும், மாளிகைப்புறம் மூலஸ்தானம் முன்பு நடந்த குலுக்கலில் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவை சேர்ந்த எம்.எஸ். பரமேஸ்வரன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் இருவரும் ஐப்பசி முதல் தேதி முதல் 30ம் தேதி வரை சபரிமலையில் தங்கி பிரார்த்தனை செய்ய வேண்டும். கார்த்திகை முதல் தேதி முதல் இவர்கள் இருவரும் பொறுப்பேற்பர்.
தேர்ந்தெடுத்தது எப்படிதிருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்திய நேர்முக தேர்வில் தேர்வு செய்யப்பட்ட ஒன்பது பேர் பெயர் ஒரு பாத்திரத்திலும், மற்றொரு பாத்திரத்தில் எட்டு வெள்ளை துண்டுகளும், ஒன்றில் மட்டும் மேல்சாந்தி என்றும் எழுதப்பட்டு சுருட்டி போடப்படும். இரண்டு பாத்திரத்திலும் தலா ஒவ்வொரு துண்டு எடுக்கப்படும் போது பெயருக்கு நேராக மேல்சாந்தி வந்தால் அவர் தேர்வு செய்யப்படுவார். நேற்று ஐயப்பன் கோயிலில் நடந்த குலுக்கலில் முதலில் எடுக்கப்பட்ட எட்டு பெயர்களுக்கு நேராக வெற்றுச்சீட்டு வந்தது. ஒன்பதாவதாக சுதீர் நம்பூரி தேர்வு செய்யப்பட்டார். மாளிகைப்புறத்தில் நடந்த குலுக்கலில் ஐந்தாவது சீட்டில் பரமேஸ்வரன் நம்பூதிரி பெயர் வந்ததால் அவர் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார்.