பதிவு செய்த நாள்
19
ஆக
2019
11:08
நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோவிலில், ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமையான நேற்று, ஏராளமான பெண்கள், நாகருக்கு பால் ஊற்றி, வழிபாடு செய்தனர்.
நாகர் பிரதிஷ்டை இல்லாத கோவில் இருக்காது. கோவிலில் மரம் நின்றால், அதன் அடியில், நிச்சயமாக நாகர் சிலை இருக்கும். ஆனால், நாகரை மூலவராக கொண்ட அபூர்வ கோவில்களில் ஒன்று, நாகர்கோவில் நாகராஜா கோவில்.இதன் மூலஸ்தானம், ஓலை கூரையின் கீழ் அமைந்துள்ளது. இங்கு பாம்புகளின் நடமாட்டமும் உண்டு. இங்கிருந்து எடுக்கப்படும் மண், பக்தர்களுக்கு சந்தனத்துடன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு, ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகள், சிறப்பு வாய்ந்தவை.இந்நாளில், நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினால், திருமண தடை நீங்கும்; புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது, பெண்களின் நம்பிக்கை.நேற்று, ஆவணி மாத முதல் ஞாயிறு என்பதால், அதிகாலை முதலே, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பெண்கள், அரசு, வேம்பு மரத்தடியில் வைக்கப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி, மூலவரை தரிசித்தனர். குமரி, நெல்லை, உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து, தரிசனம் செய்தனர்.