பதிவு செய்த நாள்
19
ஆக
2019
01:08
திருப்பூர்:திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள, குரு ராகவேந்திரா கோவிலில், குருராகவேந்திர சேவா சங்கம் சார்பில், ஆராதனை மகோத்சவ விழா, கடந்த 16ல் துவங்கி நடந்து வருகிறது. மூன்றாவது நாளான நேற்று (ஆக., 18ல்) காலை 6:30 மணிக்கு யாகசாலை பூஜை, 7:30 மணிக்கு மகா அபிஷேகம், கனகாபிஷேகம் நடந்தன.
ஆன்மிக சொற்பொழிவில், குருபிரசாத் ஆச்சார் பேசியதாவது:நல்லோரிடம் பகவான் நேரடி யாக பேசுவார். இன்று பலரும், கடவுள் இருக்கிறாரா, அவரை பார்த்திருக்கிறீர்களா, பார்த்தீர் களானால், எனக்கு அவரை காட்டமுடியுமா மூன்று கேள்விகளை பிரதானமாக கேட்கின்றனர். இறைவன், எங்கும் நிறைந்திருக்கிறார். யார் நம்புகிறார்களோ அவர்களுக்கு மட்டும், காட்சி தருகிறார். நம்பிக்கை இல்லாதோருக்கு, பகவான் தன்னை காட்டிக்கொள்வதில்லை.
பிரகலாதன் அழைத்தபோது, துாணிலிருந்து பகவான் வெளிப்பட்டார். இறைவனுக்கும் நமக்கும் ஓர் இணைப்புப்பாலமாக இருப்பவர், பிரகலாதன். வாழ்வில், சத்தியம், தர்மத்தை கடைபிடிக்கவேண்டும்.
இறைவனுக்கு சேவை செய்துவிட்டு, பொன், பொருள், வீடு வேண்டும் என, வேண்டுகின்றனர். சேவைக்கு விலை பேசி, பக்தியை வர்த்தகமாக்க கூடாது. எதையும் எதிர்பாராமல் பகவானு க்கு சேவை செய்யவேண்டும். அவ்வாறு செய்யும்போது, அந்த சேவை விலை மதிப்பற்றதாகி விடுகிறது. பகவான், நாம் எதிர்பார்த்ததைவிடவும் அதிக அளவிலான நன்மைகளை அள்ளித் தருவார்.இவ்வாறு, அவர் பேசினார்.மதியம் அன்னதானம், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு, 7:30 மணிக்கு பல்லக்கு மற்றும் ரத சேவை; 8:00 மணிக்கு, மங்கள ஆரத்தி நடந்தது.