பதிவு செய்த நாள்
20
ஆக
2019
12:08
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கோவில்கள் அதிகமுள்ள கிராமம் மன்றாம்பாளையம். இங்கு, கோபுர சிற்பங்களுடன் காணப்படும் பத்ரகாளியம்மன் கோவில், 300 ஆண்டுகள் பழமை யானது; கருங்கற்களால் அமைக்கப்பட்டது.கருங்கற்களால், 32 துாண்கள் அமைக்கப்பட்டு, கருவறைக்கு மேல், 10 அடி உயர கோபுரத்தில், அனைத்து தெய்வ சிற்பங்களும் வடிவமைக் கப்பட்டு, நான்கு பக்கமும் காவல் தெய்வங்களின் சிலைகள் உள்ளன.
கற்பகிரகத்தில், ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட, ஐந்தடி உயர அம்மன், சிங்கத்தின் மேல் எட்டு கரங்களுடன் வடக்கு நோக்கி கம்பீரமாக வீற்றிருந்து, அருள்பாலிக்கிறார். அம்மனின் காலடியில் மூலவர் சிலை உள்ளது.கர்ப்பகிரகத்துக்கு வெளியே, அம்மனின் இடது பக்கத்தில், தனி சன்னதியில் விநாயகரும், வலது பக்கத்தில் கன்னிமார் கருப்பராய சுவாமியும், எதிரே சிங்க வாகனமும் வீற்றிருக்கிறது.
ஆனி திருமஞ்சனம், ஜோதிவழிபாடு ஆகிய விழாக்கள் கோவிலில் சிறப்பாக நடக்கிறது. இப் பகுதியில் அதிகம் வாழும் கவுண்டர், செட்டியார் சமூக மக்கள் பத்ரகாளியம்மனை குல தெய்வமாக வழிபடுகின்றனர்.கோவிலின் ஸ்தல விருட்சமாக, வேப்பமரம் உள்ளது.
கோவிலில், அம்மனை மனமுருகி வேண்டி, சுப நிகழ்ச்சிகளுக்கு பூ கேட்பது பிரசித்தி பெற்றது. கோவிலில், மூன்று கால பூஜை நடக்கிறது. கடந்த, 40 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்க வில்லை. திருப்பணி மேற்கொள்ள அம்மன் பூ கொடுத்துள்ளதால், திருப்பணிகளை துவங்க, கோவில் கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர்.