வசுதேவருக்கும், தேவகிக்கும் பிறந்த மகன் கிருஷ்ணர் என்பது தெரிந்த விஷயம். ’கிருஷ்ணா’ என்னும் பெயரில் பெண் ஒருத்தியும் இருக்கிறாள் தெரியுமா? அவள் தான் துருபதனின் மகளான திரவுபதி. துருபதன் கர்வம் மிக்கவன். அவனது கர்வத்தை அடக்க எண்ணிய குருநாதர் துரோணாச்சாரியார், பாண்டவர் மூலம் பாதி நாட்டை பிடுங்கினார். கோபம் கொண்ட துருபதன், யாகம் நடத்தி துரோணரைக் கொல்லும் வலிமை கொண்ட ஆண்மகன் பிள்ளையாக வர வேண்டும் என வழிபட்டான். யாக குண்டத்தில் இருந்து ஆண் குழந்தை வந்தது. அவனே ’திருஷ்டத்யும்னன்’. பாரதப்போரில் துரோணாச்சாரியாரைக் கொன்றவன் இவனே. அதே குண்டத்தில் இருந்து பெண் குழந்தை ஒன்றும் வந்தது. ’கிருஷ்ண’ (கரியவள்) என பெயரிட்டு வளர்த்தான். அவள் துருபதனின் மகள் என்பதால் ’திரவுபதி’ ஆனாள்.