பதிவு செய்த நாள்
30
மார்
2012
11:03
ஓசூர்: ஓசூர் அருகே தமிழக, கர்நாடகா எல்லையில், தேவீரப்பள்ளி கிராம கோதண்டராமஸ்வாமி கோவில் தேர்திருவிழா நடந்தது. இக்கோவில் திருவிழா கடந்த காலத்தில், 15 ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பின் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, 2001ம் ஆண்டு முதல் இக்கோவில் தேர்த்திருவிழா நடக்கிறது. இக்கோவில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இந்த திருவிழாவில் கர்நாடகா, தமிழக எல்லையோர கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கர்நாடகா கூட்டுறவு துறை இயக்குனர் நாராயணசாமி தேரை வடம்பிடித்து துவக்கி வைத்தனர்.
கல் சக்கரத்தால் செய்யப்பட்ட இந்த பழமையான தேரில் சீதா, ராமர், அனுமான் மற்றும் லட்சுமணன் உற்சவ மூர்த்திகள் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிதன்னர். முக்கிய வீதிகள் வழியாக வலம் சென்ற தேரில் பக்தர்கள், பல்வேறு வேண்டுகள் நிமித்தம் உப்பு, வாழை பழங்களை எரிந்து சாமி கும்பிட்டனர். விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. மாலை உற்சவ மூர்த்தி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள், சாமிகளை ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலில் பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்தனர். இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.