பதிவு செய்த நாள்
24
ஆக
2019
03:08
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சி கோபால்சுவாமி மலையில் எழுந்தருளியுள்ள ருக்மணி, சத்யபாமா சமேத நந்த கோபால்சுவாமி மலைக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் உறியடி உற்சவத்திருவிழா நேற்று 23ம் தேதி துவங்கியது.
விழாவையொட்டி நேற்று 23ம் தேதி காலை, 7:00 மணிக்கு சுதர்சன ஹோமம், காலை, 9:00 மணிக்கு மேல் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, நந்த கோபால் சுவாமி பஜனைக்குழுவினரின் பக்தி பஜனை பாடல்கள், மதியம், 12:00 மணிக்கு யசோதா தேவிக்கு சீமந்த சீர் நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு அழுக்குத்துரை பஜனைக்குழுவினர் கண்ணன் பிறப்பு மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
இன்று 24ல் காலை, 7:00 மணிக்கு உறியடி உற்சவம், காலை, 11:00 மணிக்கு பக்தி பஜனைப் பாடல்கள், செங்கத்துரை பஜனை குழுவினர், தங்கம்மாள் நினைவு பஜனைக்குழுவினர், நந்த கோபால்சுவாமி பஜனைக்குழுவினரின் பஜனை நிகழ்ச்சி இன்று 24ல் நடக்கிறது.
*ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி ஒன்பது வகையான அபிஷேகம், ஒன்பது வகை அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விஷ்வ ஹிந்த் பரிசத் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட அமைப்பாளர் நாட்ராயசாமி தலைமை வகித்தார். விழாவையொட்டி கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. கிருஷ்ணர் வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.