பழநி : விடுமுறைதினம், கார்த்திகையை முன்னிட்டு, பழநிமுருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.
பழநி மலைக்கோயில் ஆவணி கார்த்திகையை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநில மற்றும் பக்கத்து மாவட்ட பக்தர்கள் காவடிகள், பால்குடங்கள் எடுத்தும் படிப்பாதையில் கற்பூரம் ஏற்றி படிபூஜை செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ரோப்கார் இயங்காததால், வின்ச் ஸ்டேஷனில் பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாகவும், பொது தரிசன வழியில் 3 மணிநேரம் காத்திருந்தும் முருகனை தரிசனம் செய்தனர். திருமுருக பக்தசபா சார்பில், 108 திருவிளக்குபூஜையில் பக்தி சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது. இரவு தங்கமயில், தங்கரதப்புறப்பாட்டில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.