பதிவு செய்த நாள்
30
ஆக
2019
01:08
மதுரை: தமிழகத்தில் சிவகங்கை, துாத்துக்குடி, ஈரோடு மாவட்டங்கள் உட்பட மேலும் பல்வேறு இடங்களில் அகழாய்வு பணிகளை விரிவுபடுத்த தொல்லியல் துறை திட்ட மிட்டுள்ளது.
இதுகுறித்து தொல்லியல் துறை வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தில் தொல்லியல் துறை சார்பில் இதுவரை 40 வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி அழகன்குளம், கொடுமணல், கொற்கை, பூம்புகார், தொண்டி, திருக்கோவிலுார், மாங்குளம், மாங்குடி, பேரூர், பரிக்குளம் ஆகிய இடங்களில் அவற்றின் தொன்மை மற்றும் பண்பாட்டு கூறுகள் வெளிக்கொணரப்பட்டன.இதையடுத்து தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான தொடர் களஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 2019 - 2020ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி மற்றும் சுற்றியுள்ள கொந்த கை, மணலுார், அகரம் போன்ற பகுதிகளிலும் தொடர் அகழாய்வு மேற்கொள்ளப்படவுள்ளன. இதுபோல் துாத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுார், சிவகளை, ஈரோடு மாவட்டத்தில் கொடு மணல் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.
இதுதவிர மேலுார், திருவண்ணமாலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரலாற்றுக்கு முந்தைய கால தொல்லியல் இடங்களில் அகழாய்வுகள் நடந்துவதற்கான களஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தை வெளிக்கொண்டு வரும் வகையில் ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள தொன்மை பகுதிகளும் கண்டறியப்படவுள்ளன.
இதுதொடர்பான கருத்துரு மாநில அரசு பரிந்துரைப்படி மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய (சி.ஏ.பி.ஏ.,) நிலைக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.இந்த ஆய்வுகள் வரலாற்று காலத்திற்கு முந்தைய மக்கள் வாழ்ந்த பகுதிகள், தொழிற்கூடங்கள் அடங்கிய பகுதிகளை நோக்கியதாக அமையும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆழ்கடலிலும் அகழாய்வு...
தமிழர்களின் கடந்த கால வாணிபத் தொடர்புகளை அழமாக ஆய்வு செய்யும் வகையில் ஏற்கனவே தமிழக தொல்லியல் துறை பூம்புகார், கொற்கை, அழகன்குளம் மற்றும் வசவ சமுத்திரம் ஆகிய இடங்களில் அகழாய்வு மேற்கொண்டுள்ளது. கிரேக்க, ரோமானிய மற்றும் அரபு நாட்டு வணிகர்களுடனான தொடர்பை முறையாக ஆராயும் பொருட்டு சங்ககால மற்றும் இடைக்கால துறைமுக நகர்கள் அமைந்த பகுதிகளில் ஆழ்கடல் அகழாய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
இதற்காக முன்னணி கடலியல் தேசிய நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடக்கிறது.