மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது. சிறுமுகையில் விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து விநாயகர் சதுர்த்தி பக்தி பெருவிழாவை கொண்டாடினர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறுமுகை, சின்னகள்ளிபட்டி, முடுதுறை, இலுப்பநத்தம், பழத்தோட்டம், தியேட்டர் மேடு உள்பட, 35 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டன.
விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். நேற்று மாலை விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம், சிறுமுகை தியேட்டர்மேட்டிலிருந்து துவங்கியது. ஊர்வலத்தை மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட துணை தலைவர் முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் சிறுமுகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பழத்தோட்டம் அருகே பவானி ஆற்றில் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில், மாநில மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் விழா கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்றனர்.