பதிவு செய்த நாள்
04
ஏப்
2012
10:04
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று நடந்த திருக்கல்யாண உற்வசத்தில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி வழிப்பட்டனர். பிரசித்தி பெற்ற கரூர் அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு பங்குனி திருவிழா கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நந்தி, பூதம், ரிஷபம், கயிலாயம் போன்ற வாகனத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கோவிலில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. நாளை (5ம் தேதி) தேர் வடம் பிடித்தல், 6ம் தேதி நடராஜமூர்த்திக்கு அபிஷேகம், தீர்த்தவாரியும், 7ம் தேதி விடையாற்றி உற்சவம் ஆளும் பல்லாக்கும், 8ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. வரும் 9ம் தேதி பிராயச்சித்த அபிஷேகம், சண்டிகேஸ்வரர் வீதி உலாவுடன் நிறைவடைகிறது. நாள் தோறும் காலை 8.30 மணியிலிருந்து இரவு 7 மணி வரை ஸ்வாமி வீதி உலாவும், விழா தினங்களில் மாலை திருமுறைப் பாராயணமும், சொற்பொழிவும், இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் சிவாஜி, முல்லை ஆகியோர் செய்து வருகின்றனர்.