பதிவு செய்த நாள்
16
செப்
2019
01:09
செய்யாறு: திருவண்ணாமலை அருகே, செய்யாறில் வேதபுரீஸ்வரர் கோவிலில் மின்னல் தாக்கி கோபுரம் சேதமடைந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில், நேற்று முன்தினம் இரவு, பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, செய்யாறு டவுன் பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில், கோபுர உச்சியில் உள்ள யாழி கொடுங்கை மேல்பகுதி சேதமடைந்தது. மேலும், கோவிலில் பொருத்தப்பட்டிருந்த மின்சாதன பொருட்கள், சிசிடிவி கேமராக்கள், உள்ளிட்டவை சேதமடைந்தன. கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி சேதமடைந்ததால், மின்னல் தாக்கியது தெரியவந்தது. இதை அடுத்து ராஜகோபுரம், சேதமடைந்ததையொட்டி சிவாச்சாரியார்கள் கோவிலில் பரிகார பூஜை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு கோவிலினுள் அனுமதிக்கப்பட்டனர்.