பதிவு செய்த நாள்
16
செப்
2019
03:09
இம்மாதம் சுக்கிரன் அக்.5 வரையும், புதன் செப்.25க்கு பிறகும் நன்மை தருவர். குரு மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். பொருளாதார வளம் மேம்படும். பண வரவு அதிகரிக்கும். இருப்பினும் செலவை குறைத்து சிக்கனமாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் குருபகவானால் செல்வாக்கு மேம்படும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சுக்கிரனால் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். புதனால் செப்.25 வரை கணவன், மனைவி இடையே பிணக்குகள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளின் வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. அதன்பின் முயற்சி வெற்றி பெறும். சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செப். 26,27ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். அதே நேரம் அக். 12,13,14ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
தனியார் துறை பணியாளர்கள் செப்.25 வரை அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். கோரிக்கைகள் நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல. சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம். அதன் பிறகு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். அக்.10,11ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரத்தில் கடந்த மாதம் பெண்கள் வகையில் இருந்த தொல்லைகள் மறையும். ஆனால் இந்த மாதம் பகைவரால் தொல்லை வரலாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். மாத முற்பகுதியில் வீண் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். செப்.30, அக்.1,2ல் எதிர்பாராத வகையில் பணம் வரும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். செப்.18,19,22,23, அக்.15,16ல் பண விரயம் ஏற்படும். முயற்சியில் தடைகள் வரலாம். மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் செப்.26க்கு பிறகு விடுபடுவர். கூட்டாளிகள் வகையில் கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக கலைஞர்கள் உதவிகரமாக செயல்படுவர். உங்களுக்கு வரவேண்டிய புகழ், பாராட்டு கிடைக்கும். மாதஇறுதியில் மனதில் சோர்வு ஏற்படும். புதிய ஒப்பந்தம் பெற தடைகள் குறுக்கிடும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான வளர்ச்சி காண்பர். செப்.25 வரை சிலர் பெண்களால் பண இழப்பை சந்திக்கலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
மாணவர்கள் குருபகவானின் சாதக பலனால் போட்டிகளில் வெற்றி காணலாம். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு துணை நிற்கும். செப்.25 வரை மெத்தனமாக இருக்க வேண்டாம்.
விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். மஞ்சள், பழவகைகள் போன்றவற்றின் விளைச்சல் சிறப்பாக இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தாமதமாகும். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. வழக்கு, விவகாரம் பாதகமாகவே அமைய வாய்ப்புண்டு. செப்.25 க்கு பிறகு பாசி பயறு பயிரிடவும். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் ஆதாயம் அதிகரிக்கும்.
பெண்கள் வாழ்வில் குதூகலம் காண்பர். அன்றாட பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவர்.
தோழிகள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். செப்.25க்கு பிறகு நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். அக்.3,4ல் விருந்து, விழா என செல்வீர்கள். சகோதரிகளால் நன்மை கிடைக்கும். உடல்நிலை சுமாராக இருக்கும்.
* நல்ல நாள்: செப்.20,21, 24,25,30, அக்.1,2,3,4,10, 11,12,13,14,17
* கவன நாள்: அக்.5,6 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:1,5
* நிறம்: மஞ்சள், வெள்ளை
பரிகாரம்:
● தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
● செவ்வாயன்று முருகப்பெருமான் தரிசனம்
● வெள்ளியன்று துர்கைக்கு எலுமிச்சை தீபம்