பதிவு செய்த நாள்
19
செப்
2019
11:09
சிவகாசி : சிவகாசி ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு ஐஸ்வர்ய லட்சுமி அலங்காரத்தில் சிறப்பு பூஜை, மற்றும் குத்துவிளக்கு பூஜை நடந்தது.சிவகாசி பி.கே.என்., ரோட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ பேச்சியம்மன் கோயில். நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யவும், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கவும், பணப்பற்றாக்குறை நீங்கவும், நகரில் தொழில் விருத்தி அடையவும் அம்மனுக்கு ஐஸ்வர்ய லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் 108 குத்து விளக்கு பூஜை நடந்தது. பெண்கள் கலந்து கொண்டனர். பொதுவாக கோயிலை வாழை, தோரணம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அலங்கரிப்பர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்வர். ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் ஐஸ்வர்ய அலங்காரத்தில், கோயில் முழுவதும், ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது.
10, 20, 50, 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளால் கோயில், அம்மன் சன்னதி அலங்கரிக்கப் பட்டது. இதற்காக 7 லட்சம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப் பட்டதை ஆச்சர்யத்துடன் பார்த்து பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.கோயில் ஐயர் ஸ்ரீகார்த்திகேயன்: மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கவும், தொழில் விருத்தி அடையவும் அம்மன் மற்றும் கோயிலுக்கு ஐஸ்வர்ய லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களிடம் பணம் வசூல் செய்து இந்த அலங்காரம் செய்யப்பட்டது.ரூபாய் நோட்டுகளால் ஐஸ்வர்ய அலங்காரம் செய்ய ஒரு வாரம் தேவைப்பட்டது. பூஜை முடிந்த பின்னர் பக்தர்களுக்கு பணம் வழங்கப்படும்.