பதிவு செய்த நாள்
22
செப்
2019
03:09
பொங்கலூர் கோவில்பாளையம் ராமசாமி கோவிலில் மூன்றாவது கண் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பொங்கலூர் கோவில்பாளையம் ராமசாமி கோவிலில், நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை வழிபாடு நடந்தது. கோவில் நடை திறக்கப்பட்டதும் அதிகாலை முதலே பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றியும், உப்பு சாத்தியும் வழிபட்டனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த சவுக்கு கம்புகளால், பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல், ஒருவர் பின் ஒருவராக ஊர்ந்து சென்று சுவாமியை தரிசித்தனர். சில பக்தர்கள் மொட்டை அடித்தும், பொங்கல் வைத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இங்கு வாழைப்பழங்களை தானமாகக் கொடுத்தால், தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். சில பக்தர்கள் வாழை பழங்களை கொண்டு வந்து கோவிலில் தானமாகக் கொடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் அன்னதானம், பிரசாதம் ஆகிவற்றை பிறருக்கு வழங்கி மகிழ்ந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக, திருப்பூர் தாராபுரம், பல்லடம், காங்கேயம் ஆகிய பகுதிகளில் இருந்து, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோவில் வளாகத்தை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். கோவில் வளாகத்தில், சிசிடிவி கேமரா பொருத்தி, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், பக்தர்கள் தங்கள் உடைமைகள், செல்போன், பணம், பர்ஸ், குழந்தைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறு போலீசார் ஒலி பெருக்கியில் அறிவித்தபடி இருந்தனர். இதனால், பக்தர்கள் அமைதியாக சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று கடும் வெயில் கொளுத்தியது. இதனால், பக்தர்கள் தரிசனம் முடிந்தவுடன் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அவசரப் பட்டனர். இதனால், கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குவதில் தொய்வு ஏற்பட்டது. மேலும் சிறார்களை மகிழ்விக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.