பதிவு செய்த நாள்
23
செப்
2019
12:09
திருத்தணி: அகத்தீஸ்வரர் கோவிலில், 64 பைரவர்களுக்கு, தனித்தனியாக, யாக சாலை அமைத்து, சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்,மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று, 10வது ஆண்டாக, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், 64 பைரவர்களுக்கு சிறப்பு யாகம் நடந்தது.இதற்காக, கோவில் வளாகத்தில், 64 பைரவர்களுக்கும், தனித்தனியாக யாகசாலை மற்றும் கலசங்கள் அமைக்கப்பட்டன.நேற்று முன்தினம், ஸ்ரீருத்ர த்ரிசதி ஹோமம், ரஷா பந்தனம் மற்றும் அகத்தீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை, நான்கு கால யாக பூஜைகள், வடுக பைரவர் பூஜை நடந்தன.பின், 64 பைரவர்களுக்கும், ஸ்ரீ மகா வடுக யாக சாலை பூஜைகளை, 64 சிவச்சாரியார்கள் நடத்தினர்.அனைத்து கலசங்களும் ஊர்வலமாக புறப்பட்டு மூலவர் அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து மூலவர் காமாட்சி அம்பாளுக்கும், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு, கேரள வாத்தியங்களுடன் பைரவர்கள் மற்றும் உற்சவர் காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில், சென்னை, திருவள்ளூர், வேலுார் மற்றும் சித்துார் ஆகிய மாவட்டங்களில் இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை வழிபட்டனர்.