விழுப்புரம் அருகிலுள்ள சிறுவந்தாடு கிராமத்தில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் கொண்டிருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமையில் மட்டைத் தேங்காய் கட்டி வழிபட்டால் உங்களுக்கு பூமாலையே (மணமாலை) தோள் தேடி வரும். சோழ மன்னர் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில். விஜயநகர மன்னர் அச்சுதராயர் இங்கு திருப்பணி செய்தார்.
தற்போதுள்ள அமைப்பு 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. மண்டபம் முழுவதும் கருங்கல்லாலும், விமானம் மட்டும் சுதையாலும் ஆனதாகும். கருவறையில் மூலவர் சுகாசனத்தில் அமர்ந்து, லட்சுமி தாயாரை மடியில் தாங்கியபடி இருக்கிறார். தாயாரின் வலதுகை பெருமாளை அணைத்த படியும், இடதுகை தாமரை ஏந்தியும் உள்ளது. அர்த்த மண்டபத்தின் மேற் கூரையில் பல்லி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலுள்ள பல்லி போலவே இதன் உருவ அமைப்பு உள்ளது. இதை தொட்டு வணங்க கிரகதோஷம், நோய், திருஷ்டி விலகும். திருமணத் தடை உள்ளவர்கள் லட்சுமி நாராயணர் முன் மட்டைத் தேங்காய் வைத்து வழிபடுகின்றனர். இதை வீட்டில் வைத்து வழிபட திருமண யோகம் உண்டாகும். பக்த ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமையில் துளசி மாலை சாத்தி நெய்தீபம் ஏற்ற விருப்பம் நிறைவேறும்.