பதிவு செய்த நாள்
24
செப்
2019
11:09
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் பணி துவங்கிஉள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் பற்றிய அரிய தகவல்கள், 13ம் நுாற்றாண்டில் கல்வெட்டுகளாக, கோவிலுக்குள், 70 இடங்களில் உள்ளன. இவற்றை, 1935 - 36 மற்றும் 1941 - 42ம் ஆண்டுகளில், மத்திய தொல்லியல் துறை வல்லுனர்கள் ஆவணப்படுத்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். இவை, மைசூரு மத்திய தொல்லியல் ஆவண காப்பகத்தில் பராமரிக்கப்படுகின்றன.
நிர்வாகம் முடிவு: கல்வெட்டு தகவல்களை, எளிய தமிழ், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, கோவிலின் பழமையை பாதுகாக்க, தொல்லியல் துறை மூலம் மீண்டும் ஆய்வு செய்ய, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.இதற்காக, தொல்லியல் துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கம் தலைமையில், உதவி சிற்றெழுத்தர் கனகராஜ், தொல்லியல் ஆராய்ச்சியாளர் பாண்டீஸ்வரன் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, சுவாமி சன்னிதி முன், சனீஸ்வரர் சன்னிதி எதிரே உள்ள கல் சுவரில், நேற்று முதல் கட்ட ஆய்வை துவக்கியது. இது குறித்து, சாந்தலிங்கம் கூறியதாவது:இங்குள்ள கல்வெட்டுகள், பிற்கால பாண்டிய மன்னர் காலத்தின் தமிழ் எழுத்துகளை கொண்டவை. கல்வெட்டுகளில் வட்டெழுத்துக்கள் இல்லை. பச்சையப்பன் முதலியார், சமஸ்கிருதம், ஆங்கிலம் கற்றுக்கொள்ள, 1 லட்சம், வராகன் தொகையை, கோவிலுக்கு நன்கொடை வழங்கிய தகவல், கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.
70 இடங்கள்: கோவிலில், 70 இடங்களில் அரிய கல்வெட்டுகள் உள்ளன. ஆய்வில், மேலும் சில கல்வெட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. தடிமனான வெள்ளைத்தாளை கல்வெட்டில் வைத்து, கறுப்பு மை மூலம் அச்சுப்பதித்து படி எடுக்கப்படும்.அதில் வெள்ளையாக தெரியும் எழுத்துகளை படித்து, எளிய தமிழ், ஆங்கிலத்தில் ஆவணப்படுத்தப்படும். படி எடுக்கும் பணி, மூன்று மாதங்களில் முடியும். கல்வெட்டுகளின் முழு தகவல்கள் அடங்கிய புத்தகம், ஆறு மாதங்களில் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.