பதிவு செய்த நாள்
24
செப்
2019
01:09
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்திற்கு, வரும், ஜனவரி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, புதியதாக பொறுப்பேற்ற இணை ஆணையர் நம்பிக்கையுடன் தெரிவித்து உள்ளார். இம்முறையாவது, கும்பாபிஷேகம் நடக்குமா என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
122 அடி உயரம்: திருத்தணி முருகன் கோவிலில், 2009ல், ஹிந்து அறநிலைய துறை அனுமதியுடன், ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டும் பணி துவங்கியது.
கோபுரம், 25 அடிக்கு அடித்தளம், 11 அடிக்கு கல்ஹாரம், 122 அடி உயரம் கோபுரம் பணிகள் துவங்கப்பட்டன. கடந்த, 2011க்குள் முடிக்க திட்டமிட்டிருந்த ராஜகோபுர பணிகள், பல்வேறு பிரச்னைகளால், கிடப்பில் போடப்பட்டது. பின், 2017ல், ராஜகோபுர பணிகள் மீண்டும் துவக்கப்பட்டன.
நம்பிக்கை: ஆரம்பம் முதல், ராஜகோபுர பணிகள், துரித வேகத்தில் நடந்து வந்ததால், கடந்தாண்டு டிசம்பர் மாதம், ஒன்பது நிலைகள் கட்டப்பட்டு, சிற்பங்கள் ஏற்படுத்தி வண்ணம் தீட்டும் பணி முடிந்தது. இந்தாண்டு, ஜனவரி மாதத்தில், ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என. கோவில் அறிவித்தது. ஆனால், ராஜகோபுரத்திற்கும், மாடவீதிக்கும் இணைப்பு படிகள் அமைக்கும் பணி, கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், கோவில் தக்கார் ஜெய்சங்கர், புதியதாக பொறுப்பேற்ற, கோவில் இணை ஆணையர் பழனிகுமார் ஆகியோர், ராஜகோபுர பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது, இணை ஆணையர், வரும் ஜனவரி மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
கடிதம்இது குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ராஜகோபுரத்தில் இருந்து, தேர் வீதிக்கு, மொத்தம், 65 படிகள் அமைக்கப்பட வேண்டும். இந்த படிகள், கற்களால் செய்யலாம் என, தீர்மானித்து, 96 லட்சம் ரூபாய் செலவாகும் என, திட்ட மதிப்பீடு தயார் செய்து, ஹிந்து அறநிலை துறை ஆணையருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆணையர், டெண்டர் தொகை அதிகம் என்பதால், சிமென்ட்டால் படிகள் அமைத்தால், எவ்வளவு குறையும் என, திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்புமாறு கேட்டு உள்ளார். அதற்கான திட்ட மதிப்பீடு, 65 லட்சம் ரூபாய் தயாரித்து அனுப்ப உள்ளோம். ஆணையரின் அனுமதி கிடைத்தால், ஒரு மாதத்திற்குள் இணைப்படிகள் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.