பதிவு செய்த நாள்
24
செப்
2019
03:09
சோழர் காலத்தில், நவராத்திரி விழா, அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
* தமிழகத்தில், நாயக்கர் காலத்திலிருந்து தான், மக்கள் கொண்டாடும் ஒன்பது நாள் திருவிழாவாக, நவராத்திரி விழா மாறியது
* நவராத்திரி காலத்தில் தான், மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை, விஜயநகர மன்னர்கள் ஏற்படுத்தினர்
* ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு, முதன் முதலாக, நவராத்திரி கொண்டாடும் உரிமையை, மன்னர் திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே, தமிழகத்தில், நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது
* நவராத்திரி நாட்களில் பெண்கள், கன்யா பூஜை செய்தால், சகல செல்வங்களையும் பெறலாம்
* நவராத்திரி பண்டிகையை, ராமர் தான், முதன் முதலில் கொண்டாடியதாக, புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவராத்திரி விரதத்தை ராமபிரான், கடைப்பிடித்த பிறகு தான், அவருக்கு, சீதை இருக்கும் இடம் தெரிந்தது என்று, தேவி பாகவதம் சொல்கிறது
* நவராத்திரி நாட்களில், இரவு, 7:00 - 9:30 மணி வரை, தேவி வழிபாடு செய்ய உகந்த நேரம்
* பங்குனி மாத, அமாவாசைக்கு பின், பிரதமையில் துவங்கும், லலிதா நவராத்திரி; மாசி மாதம் வரும், ராஜ மாதங்கி நவராத்திரி; ஆடி மாதத்தில் வரும், மகாவராகி நவராத்திரி; புரட்டாசியில் வரும், சாரதா நவராத்திரி ஆகிய நான்கையும் பெண்கள் கடைப்பிடித்தால், அம்பிகையின் அருளை முழுமையாக பெறலாம்
* அனைத்திலும் தேவியே இருக்கிறாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே, நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது
* கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக, நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்று அர்த்தம்
* ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால், பிறகு, வாழ்நாள் முழுவதும், வைக்க வேண்டும்
* நவராத்திரியின் ஒன்பது நாட்களும், தினமும் பகலில், 1,008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால், அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்
* ஸ்யவன மகரிஷியையும், சுகன்யா தேவியையும் தியானித்தபடியே, தினமும், நவராத்திரி பூஜையை துவங்க வேண்டும்
* குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளர, நவராத்திரி நாட்களில், அரிசி மாவால் கோலமிட வேண்டும். சுண்ணாம்பு மாவால் கோலம் போட்டால், எதிர்மறையான விளைவுகளே உருவாகும்
* ஒன்பது நாட்களிலும், தேவியாக பாவித்து துதிக்க, நமக்கு சொந்தம் அல்லாத, பிறர் வீட்டு குழந்தையை அழைத்து வந்து உபசரிக்க வேண்டும்
* நவராத்திரி பூஜையின் நிறைவாக, தினமும், மஞ்சள், குங்குமம், வளையல் மற்றும் ரிப்பன் போன்ற மங்கல பொருட்களை, ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாக பலரும் ஒன்று சேர்ந்து, மங்கல பொருட்களை மிகப்பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பு
* நவராத்திரி ஒன்பது நாட்களிலும், நாராயண சுக்தம், புருஷ சுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சன மந்திரம் மற்றும் கருட மந்திரம் ஆகியவற்றை கூறி, வழிபாடு செய்யலாம்.