பதிவு செய்த நாள்
27
செப்
2019
11:09
நாகர்கோவில்: சபரிமலை பயணத்துக்கு, மூன்று விதமான முன்பதிவு இருப்பது மாற்றப்பட்டு, பக்தர்கள், ஒரே முன்பதிவில், சபரிமலைக்கு செல்ல வசதி ஏற்படுத்தப்படும் என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர், பத்மகுமார் தெரிவித்தார்.
ஆலோசனை: பத்மனாபபுரத்தில் அவர் கூறியதாவது:சபரிமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள், நிலக்கல்லில் இறங்கி, பின், கேரள அரசு பஸ்சில் பம்பை சென்று திரும்ப வேண்டும் என முடிவு செய்து, கடந்த சீசனில் அது அமல்படுத்தப் பட்டது.ஆனால், கேரள உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவுப்படி, பக்தர்களின் வாகனங்கள் பம்பை வரை செல்லலாம். இந்நிலையில், பயணம், தரிசனம், அறை முன்பதிவு, வழிபாடு போன்ற அனைத்துக்கும், ஒரே இடத்தில் முன்பதிவு செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள், அவரவர் வீடுகளில் இருந்து, இந்த முன்பதிவை செய்ய முடியும். அவ்வாறு செய்ய முடியாதவர்களுக்கு, நிலக்கல் மற்றும் பம்பையில், தேவசம்போர்டு சார்பில் முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம், சபரிமலைக்கு யார் வருகின்றனர், எத்தனை பேர் வருகின்றனர் என்பதை அறிய முடியும்.ஓரிரு நாட்களில், தேவசம்போர்டு மற்றும் போலீஸ் துறையின், ஐ.டி., வல்லுனர்கள் கூடி, இதை முடிவு செய்வர். விழிப்புணர்வு பிரசாரம்அதன் பின், அனைத்து மாநிலங்களிலும், இது பற்றி விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும். முன்பதிவு கட்டாயம் என்பது உடனடியாக அமலுக்கு வராவிட்டாலும், நாளடைவில் அது கட்டாயமாக்கப்படும்.முன்பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வர முடியாவிட்டால், அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பது பற்றியும் ஆராயப்படும்.முன்பதிவுக்காக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளதால், முன்பு போல, பம்பையில் பெண்களை தடுக்க, தேவசம்போர்டு ஊழியர்களைநியமிக்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.