பதிவு செய்த நாள்
27
செப்
2019
03:09
வீரபாண்டி: கரபுரநாதர் கோவிலில், பிரதோஷ பூஜை தொடங்கி, 30 ஆண்டு நிறைவடைந்ததால், உற்சவ கட்டளைதாரர், சிவாச்சாரியார்கள் கவுரவிக்கப்பட்டனர்.
பிரதோஷத்தையொட்டி, சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், நேற்று 26ல் காலை, மூலவர் கரபுரநாதர், பெரியநாயகி தாயாருக்கு, அபிஷேகம் நடந்தது. மாலை, நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, காளை வாகனத்தில், பிரதோஷ மூர்த்தியான பெரியநாயகி சமேத கரபுரநாதரை, சர்வ அலங்காரத்தில் எழுந்தருளச்செய்தனர்.
திரளான பக்தர்கள், காளை வாகன ஈஸ்வரனை, தோளில் சுமந்து, ’சிவ, சிவ’ கோஷம் முழங்க, கோவிலை சுற்றிவந்தனர். இக்கோவிலில், பிரதோஷ பூஜை தொடங்கி, நேற்றுடன் 26ல் , 30 ஆண்டு நிறைவடைந்ததால், கோவில் சிவாச்சாரியார்கள் சார்பில், செங்கோட்டுவேல் உள்ளிட்ட உற்சவ கட்டளைதாரர்கள், பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். அதே போல், கட்டளைதாரர்கள் சார்பில், சிவாச்சாரியார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.