திருப்பரங்குன்றம் : நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தனது கரத்திலுள்ள வேல் மூலம் குன்றத்து மலை மீதுள்ள பாறையில் கீறி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கியதை நினைவு கூறும் வகையிலும், மழை வேண்டியும் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா நடந்தது.
மூலவர் கரத்திலுள்ள வேலுக்கு பாலாபிஷேகம் முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பல்லக்கில் மலைமேல் வேல் கொண்டு செல்லப்பட்டு சுப்பிரமணியர் கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அங்கு சுனை தீர்த்தத்தில் வேலுக்கு 16 வகை திரவிய அபிஷேகம் செய்யப்பட்டது. கிராமத்தினர் சார்பில் 150 படி கதம்ப சாத பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் வேல் புறப்பாடாகி, மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழநி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது. பின்னர் பல்லக்கில் எடுத்துச்செல்லப்பட்டு மூலவர் கரத்தில் மீண்டும் சேர்ப்பிக்கப்பட்டது.