பதிவு செய்த நாள்
07
ஏப்
2012
10:04
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை நடந்த பங்குனித் தேரோட்டத்தின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள், "ரெங்கா ரெங்கா கோஷம் விண்ணைப் பிளக்க, தேர் வடம் பிடித்து இழுத்தனர். பூலோக வைகுண்டமாகக் கருதப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஆதி பிரம்மோற்சவம் எனப்படும், பங்குனித் தேர்த் திருவிழா, கடந்த மாதம், 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில், தினந்தோறும் எழுந்தருளி, திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மண்டகப்படி பெற்றார்.
கடந்த இரண்டாம் தேதி, உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலுக்குச் சென்று, நம்பெருமாள், "சேர்த்தி சேவை சாதித்தார். இதனால், ஊடல் கொண்ட தாயார், நம்பெருமாள் மீது, நேற்று முன்தினம் காலை, "மட்டையடி பிரளயம் செய்தார். நம்மாழ்வார், தாயாரை சமாதானம் செய்தார். இதனால் சமாதானமடைந்த தாயாருடன், நம்பெருமாள், "சேர்த்தி சேவை சாதித்தார். தாயார் சன்னதி சேர்த்தி மண்டபத்தில், நேற்று முன்தினம் மாலை, மூன்று மணியில் இருந்து, நேற்று காலை வரை, தொடர்ந்து, "சேர்த்தி சேவை நடந்தது.
நேற்று நள்ளிரவு, நம்பெருமாள், தாயாருக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி உத்திரத்தன்று மட்டுமே, "சேர்த்தி சேவை நடக்கும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தாயாரையும், நம்பெருமாளையும் தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே, தேரோட்டத்தில் பங்கேற்க, ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். கோவில் யானை ஆண்டாள் முன்னே செல்ல, "ரெங்கா ரெங்கா கோஷத்துடன், பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். காலை 10 மணிக்கு துவங்கிய தேரோட்டம், மதியம் ஒரு மணிக்கு நிறைவடைந்தது.நேற்றிரவு சத்தாபரணமும், 7ம் தேதி ஆளும் பல்லக்கு உலாவுடன், பங்குனித் திருவிழா நிறைவடைகிறது.