பதிவு செய்த நாள்
03
அக்
2019
11:10
சென்னை:வடபழநி ஆண்டவர் கோவிலில், சக்தி கொலுவை, ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதில், பார்வையற்ற மாணவியின் பாட்டு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி நான்காம் நாள் விழா, கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று, கொலுவை பார்வையிட்டார்.
பிரமாண்ட கொலு: சக்தி கொலு குறித்து கூறியதாவது:வடபழநி ஆண்டவர் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு முன், சிறிய அளவில் கொலு வைக்கப்பட்டு இருந்தது.இக்கோவில் தக்காராக பொறுப்பேற்றுள்ள ஆதிமூலத்தின் தனி முயற்சியால், பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த பொம்மைகள், கொலுவை அலங்கரித்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். முதல்வரின் செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், நடிகை லதா, ஆச்சி மசாலா நிறுவனர் பத்ம சிங் ஐசக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கொலுவை பார்வையிட்டனர். நேற்று மாலை, 4:00 மணிக்கு, மரியாலையா பள்ளி மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.
பார்வையற்ற மாணவி: மாலை, 5:30 மணி முதல், 6:00 மணி வரை, வேத பாராயணம், ஸ்ரீருத்ரம்,சமஹம், ஸ்ரீசுக்தம் நடந்தது. தொடர்ந்து, லலிதாசகஸ்ரநாம பாராயணம் நடந்தது. மாலை நடந்த பொதுமக்கள் கொலு பாட்டில், அரசு இசைக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு டிப்ளமா படிக்கும், பார்வையற்ற மாணவி பிரியவதனாவின் பாட்டு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மாலை, 7:00 மணிக்கு, நற்பண்பை பெற சக்தி கொடு எனும் தலைப்பில், நாகை முகுந்தனின் சொற்பொழிவு நடந்தது. இதற்கிடையே, மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வடபழநிஆண்டவர் கோவில் மாடவீதிகளை, நேற்று காலை, தன்னார்வலர்கள் துாய்மைப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், சுற்று வட்டார பகுதி மக்கள், வடபழநி புத்துார் கட்டு மருத்துவமனை குடும்பத்தினர், ராம்கே நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் உட்பட, 70க்கும் மேற்பட்டோர் இணைந்து செயல்பட்டனர். பின், பொதுமக்களிடம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.