பதிவு செய்த நாள்
03
அக்
2019
11:10
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நடந்த நவராத்திரி சிறப்பு பூஜையில் சிவலோகநாயகி அம்மன், காசி விசாலாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், நவராத்திரி சிறப்பு பூஜை கடந்த செப்., 29ல் துவங்கியது. தினமும் காலை, 10:00 மணிக்கு வேள்வியும், 11:00 மணிக்கு திருமஞ்சன வழிபாடும் நடக்கிறது.மதியம், 12:30 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபராதணை காண்பிக்கப்படுகிறது.நவராத்திரி பூஜையில் தேவி கன்னயாகுமாரி, மதுரை மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
நேற்று முன் தினம் காசி விசாலாட்சி அலங்காரமும், நேற்று தனலட்சுமி அலங்காரமும் செய்யப்பட்டது.இன்று தானிய லட்சுமி மற்றும் காய்கறி அலங்காரம், நாளை சந்தானலட்சுமி அலங்காரமும், 5ம் தேதி தாய்மூகாம்பிகை அலங்காரம், 6ம் தேதி சாரதாதேவி அலங்காரம், 7ம் தேதி சரஸ்வதி அலங்காரம் நடக்கிறது.
வரும், 8ம் தேதி விஜயதசமியை ஒட்டி குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் மற்றும் ஏடு எழுதுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.மேலும், கொலு வைக்கப்பட்டு, பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.* நெகமம் கன்னிகாபரமேஸ்வரி, ராமலிங்க சவுடாம்பிக்கை மற்றும் காமாட்சி அம்மன் கோவில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு, நெகமம் மாயாண்டீஸ்வரர், மரகதாம்பிக்கை அம்மன் கோவிலிலும், நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவிலில், மரகதாம்பிகை அம்மன் தினம் ஒரு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.நவராத்திரி விழாவின், மூன்றாம் நாளான நேற்று காமாட்சியம்மன் அலங்காரத்தில் கொலு வீற்றிருந்தார். பக்தர்கள் அம்மனை வணங்கினர். வரும், 4ம் தேதி அத்திவரதர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.