பதிவு செய்த நாள்
04
அக்
2019
02:10
திருமலை: மொத்தம், 20 லட்சம் பக்தர்கள் தரிசித்த, ஹிந்து தர்மார்த்த சமிதியின் புதிய வெண்பட்டுக் குடைகள், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில், நேற்று மாலை சமர்ப்பிக்கப்பட்டன.
மக்களின் வாழ்வாதாரமான உணவு உற்பத்திக்குத் தேவையான மழையை, போதிய அளவு தரும்படி இறைவனிடம் வேண்டி, திருப்பதி ஏழுமலையானுக்கு, வெண்பட்டு திருக்குடைகளை காணிக்கையாக வழங்கும் சம்பிரதாயம், நுாற்றாண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் இருந்து வருகிறது.ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில், புதிய வெண்பட்டுக் குடைகள், ஆண்டுதோறும் சென்னையிலிருந்து பாதயாத்திரையாக எடுத்து வந்து, பிரம்மோற்சவத்தின் போது, திருமலையில் சமர்ப்பிக்கப் பட்டு வருகிறது.இந்த ஆண்டு, செப்., 28ல், சென்னை, சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து, திருக்குடை ஊர்வலம் புறப்பட்டது. திருப்பதி வரை, வழிநெடுக லட்சக்கணக்கான மக்கள், திருக்குடைகளுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டனர்.ஐந்து நாள் பயணத்துக்குப் பின், திருக்குடைகள், நேற்று மதியம் திருப்பதி வந்தன. திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலுக்கு, இரண்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
வீதி உலா: மாலையில், திருமலைக்கு வந்த திருக்குடைகளுக்கு, உள்ளூர் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திருமலை மாட வீதிகளில், ஒன்பது வெண்பட்டுத் திருக்குடைகள், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டன.திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, துணை நிர்வாக அதிகாரி ஹரீந்திரநாத், தலைமை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி கோபிநாத் ஜெட்டி உள்ளிட்ட அதிகாரிகள், திருக்குடைகளைப் பெற்றுக் கொண்டனர். ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி கூறுகையில், ஆதிசேஷனின் அம்சமான திருக்குடைகள், 150 ஆண்டுகளாக தமிழகத்திலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன. 20 லட்சம் பக்தர்கள், இந்த திருக்குடைகளை, பெருமாளின் அம்சமாகவே கருதி, பயபக்தியுடன் வழிபட்டனர். இதற்கான செலவுகள் அனைத்தையும் ஹிந்து தர்மார்த்த சமிதியே ஏற்று நடத்துகிறது, என்றார்.திருப்பதி ஏழுமலையான் கோவில் வாசலில், ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில், வெண்பட்டு திருக்குடைகளை, அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வழங்க, திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, துணை நிர்வாக அதிகாரி ஹரீந்திரநாத், முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி கோபிநாத் ஜெட்டி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.