பதிவு செய்த நாள்
07
ஏப்
2012
10:04
மயிலாப்பூர்:மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவின் கடைசி நாளான நேற்று காலையில் தீர்த்தவாரியும், இரவில் திருக்கல்யாணமும், அதை தொடர்ந்து கொடியிறக்கமும் நடந்தன.மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், கடந்த மார்ச் 28ம் தேதி கொடியேற்றத்துடன், பங்குனி பெருவிழா துவங்கியது.
இதையடுத்து, திருவிழாவின் கடைசி நாளான நேற்று, காலையில் நடராஜப் பெருமான், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், அதைத் தொடர்ந்து தெப்பக் குளத்தில் தீர்த்தவாரியும் நடந்தன.மாலையில், மயில் வடிவத்தில் கற்பகாம்பாள், கபாலீசுவரரை வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின், திருக்கல்யாணமும், கயிலாச வாகனத்தில் வீதியுலாவை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.வீதியுலா முடிந்த பின், கொடியிறக்கம் மற்றும் விழா நிறைவின் அடையாளமாக, சண்டேசர் வீதியுலா நடந்தது.
இன்று காலை, உமாமகேஸ்வரர் தரிசனமும், மாலையில் பந்தம் பறி விழாவும் நடக்கவுள்ளது. தொடர்ந்து நாளை, விழா நிறைவு அபிஷேகமும், மாலையில் விடையாற்றி விழா துவக்கமும் நடைபெற உள்ளன.