உளுந்துார்பேட்டை: அகங்காரத்தை விட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்து நம் செயல்களை செய்தாலே வெற்றி நிச்சயம்’ என ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா பேசினார். உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழாவின் 4ம் நாள் விழாவிற்கு ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை முதன்மைச் செயலர் பாலச்சந்திரன், உமாதேவி பாலச்சந்திரன் சிறப்புரையாற்றினர். ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா அம்பா வரவேற்றார். ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லுாரியின் செயலர் யத்தீஸ்வரி நித்ய விவேக ப்ரியா அம்பா துவக்கவுரையாற்றினார். விழாவில் ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா பேசுகையில், ‘ராமாயணமும், மகாபாரதமும் கதை அல்ல. அவை நம் மனங்களை வளப்படுத்தும் வழிமுறைகளைக் கூறும் உண்மை நிகழ்ச்சிகள். எதுவும் என்னால் தான் முடியும் என்பது ஆணவம். இறைவனின் அருள் பலத்தால்தான் நாம் வெற்றி பெற்றோம் என்பதை மறந்தால் தோல்வி நிச்சயம். அகங்காரத்தை விட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்து நம் செயல்களை செய்தாலே வெற்றி நிச்சயம்’ என்றார்.