பதிவு செய்த நாள்
07
ஏப்
2012
11:04
வடபழனி:முருகனுக்கு சிறப்பு அலங்காரம், தெப்பத்திற்கு மின் விளக்கு அலங்காரம், வேதபாராயணம், நாதஸ்வர கச்சேரி என, வெகு விமரிசையாக நடைபெற்ற, வடபழனி முருகன் கோவில் தெப்பத் திருவிழாவை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.வடபழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். வழக்கம்போல், இந்த ஆண்டு கடந்த, 28ம் தேதியன்று பந்தக்கால் முகூர்த்தத்துடன் பங்குனி உத்திர விழா துவங்கியது. தொடர்ந்து லட்சார்ச்சனை நடத்தப்பட்டு, கடந்த 5ம் தேதி பங்குனி உத்திர விழா கொண்டாடப்பட்டது.
இதற்காக, வடபழனியை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்காவடிகள் எடுத்து வந்து, முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பங்குனி உத்திர விழாவின் சிறப்பு அம்சமாக, ஆண்டுதோறும் நடத்தப்படும் தெப்பத் திருவிழா, நேற்று இரவு நடைபெற்றது.இதற்காக, முதல் நாளான நேற்று, வடபழனி முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத் தொடர்ந்து, புறப்பாடு செய்யப்பட்ட முருகன், கோவில் வளாகத்தைச் சுற்றி வந்து, பின் தெப்பத்தில் இரவு, 7.30 மணிக்கு புறப்பாடு நடந்தது. இதற்காக, வேதபாராயணம், நாதஸ்வர கச்சேரி உள்ளிட்டவையுடன், அலங்கார மின் விளக்கில் தெப்பம் ஜொலித்ததை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.தெப்பத்தில் இரண்டாம் நாளான இன்று, சண்முகர் வள்ளி தெய்வானை புறப்பாடும், நாளை சுப்ரமண்யர், வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கோவில் துணை ஆணையர் காவேரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.