பதிவு செய்த நாள்
05
அக்
2019
11:10
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஆறாம் நாளான நேற்று, உலக நன்மைக்காக, மீனாட்சி அம்மனுக்கு, ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி, ஆறாம் நாள் விழா, கொண்டாடப்பட்டது. சக்தி கொலுவில் பிரதானமாக வீற்றுள்ள அம்பாள், கருமாரியம்மன் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆறாம் நாளான, நேற்று காலை, 7:30 மணி முதல், 12:30 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரையிலும், உலக நன்மைக்காக, மீனாட்சி அம்மனுக்கு, ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.
விழாவில், சிறப்பு விருந்தினராக, ஹிந்து தர்மார்த்த சமிதி நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் ஜனனி பங்கேற்றார். நேற்று மாலை, 4:00 மணிக்கு, லஷ்மன் ஸ்ருதி பள்ளி மாணவர்களின் இசை கச்சேரி நடந்தது. மாலை, 5:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, வேத பாராயணம், ஸ்ரீருத்ரம், சமஹம் மற்றும் ஸ்ரீ சூக்தமும், தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாம பாராயணமும் நடந்தது.நேற்று மாலை, 7:00 மணிக்கு, அறிவு பெற சக்தி கொடு எனும் தலைப்பில், தேச மங்கையர்கரசியின் சொற்பொழிவு நடந்தது.
அசத்திய அமெரிக்க மாணவியர்: வடபழநி ஆண்டவரை தரிசிப்பதற்காக அமெரிக்கா, மிச்சிகன் மாகாணத்தில் வசிக்கும் மாணவியரான, முக்தா ஸ்ரீ சாய் ரித்விகா உத்ராடி, முக்தா ஸ்ரீ சாய் சாத்விகா உத்ராடி ஆகியோர் நேற்று வந்தனர். சக்தி கொலுவை ரசித்த பின், பொதுமக்களுடன் கொலு பாட்டில் பங்கேற்று, 40 நிமிடங்களுக்கு மேல் பக்தி பாடல்களை பாடி, பார்வையாளர்களை கவர்ந்தனர். இவர்களுக்கு பக்க வாத்தியமாக மாலினி ஹரி வயலினும், வைத்தியநாதசுவாமி மிருதங்கமும் இசைத்தனர்.