பதிவு செய்த நாள்
07
ஏப்
2012
11:04
காஞ்சிபுரம்:கூழமந்தல் பேசும் பெருமாள் கோவில் தேரோட்டம், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது.காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில், கூழமந்தல் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில், புகழ் பெற்ற பேசும் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், முதலாம் ராஜேந்திர சோழனின் குருவான சர்வசிவ ஈசான பண்டிதர் வேண்டுகோளின்படி, 1012ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.இப்பெருமாள், நேரடியாக பேசியதால், பேசும் பெருமாள் என அழைக்கப்பட்டுள்ளார்.
பிற்காலத்தில், கோவில் சிதைந்து, மண் மேடாகியது.கடந்த 1995ம் ஆண்டு கோவில் குளத்தைச் சீர்செய்தபோது, பூமியிலிருந்து ஸ்ரீதேவி பூதேவி உடனுறை பேசும்பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோவில் அமைக்கப்பட்டு, 2002ம் ஆண்டு முதல், பூஜை மற்றும் விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன. ஊரில் தேரடி உள்ளது. ஆனால் தேர் இல்லை. எனவே, கோவிலுக்கு புதிதாக, 25 அடி உயரம் உடைய மரத்தேர் உருவாக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று முன்தினம், தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.தேரோட்டத்தையொட்டி, மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவம், இரவு 8 மணிக்கு தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.