பதிவு செய்த நாள்
05
அக்
2019
11:10
திருப்புவனம்: திருப்புவனத்தில் குலசேகரபட்டினம் தசரா விழாவிற்காக வேடமிட்டு செல்லும் பக்தர்கள் நேற்று திருப்புவனம் அம்மன் கோயில்களில் தரிசனம் செய்தனர். திருப்புவனம் வடகரை பக்தர்கள் வருடந்தோறும் குலசேகரபட்டினம் தசரா விழாவில் பங்கேற்பது வழக்கம், நேர்த்திக்கடன் செலுத்த உள்ள பக்தர்கள் சிவன், காளி, அம்மன், விலங்குகள் உருவம், நோயாளி உருவம் என பல்வேறு வேடங்களில் வலம் வருவது வழக்கம்.
அக். 7ம் தேதி தசரா விழா நடைபெறுவதை ஒட்டி நேற்று நேர்த்தி கடன் செலுத்த உள்ள பக்தர்கள் வேடமணிந்து வடகரையில் இருந்து ஊர்வலமாக திருப்புவனம் மாரியம்மன், மடப்புரம் காளி கோயில் உள்ளிட்டவற்றிற்கு சென்று தரிசனம் செய்தனர். காளி என்பவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் இருந்து தசரா விழாவில் பங்கேற்க நாங்கள் சென்று வருகிறோம், மைசூர் தசரா விழாவிற்கு அடுத்தபடியாக குலசேகரபட்டினம் தசரா விழா புகழ் பெற்றது. காளியை வேண்டி விரதமிருந்தால் நினைத்தது நடக்கும். விபத்தில் இருந்து உயிர் பிழைத்தவர் நோயாளி வேடம் போடுவார், விலங்குகளிடம் இருந்து உயிர் பிழைத்தவர் விலங்கு வேடம் போடுவார், சிலர் பிச்சைக்காரர் வேடம் போடுவார்கள், இதுபோன்று பல்வேறு வேடமணிந்து செல்வோம். முன்கூட்டியே உள்ளுரில் உள்ள அம்மன் கோயில்களில் வேடத்துடன் சென்று தரிசனம் செய்வது வழக்கம், என்றார்.