பதிவு செய்த நாள்
05
அக்
2019
01:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சீதாராம ஆஞ்சநேயர் கோவில், நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி தினமும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தினமும், ஒவ்வொரு அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பொள்ளாச்சி சீதாராம ஆஞ்சநேயர் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி தினமும், சீதாராமர் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.மேலும், கோவிலில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.பொள்ளாச்சி, ஆ.சங்கம்பாளையம் சக்திமாரியம்மன் கோவிலில், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, பஜனை பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர். அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
* நெகமம் ராமலிங்க சவுடாம்பிகை கோவிலில், அலகு சேர்வை செய்து சக்தி அழைப்புடன் நவராத்தரி விழா துவங்கியது. நேற்று மாலை, 7:00 மணிக்கு, பெண்கள் திருவிளக்கு வழிபாடு, பூஜை மேற்கொண்டனர்.நெகமம் - பல்லடம் ரோட்டில் உள்ள மரகதாம்பிகை உடனமர் மாயாண்டீஸ்வரர் கோவிலில், தினம் ஒரு அலங்கார வழிபாடு நடக்கிறது.நேற்று, மாயாண்டீஸ்வரர் காசிவிஸ்வநாதர் அலங்காரத்திலும், மரகதாம்பிகை அம்மன், அன்னபூரணி அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.அரசம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று, அம்மன் மஞ்சள் நிற பட்டுடுத்தி, சந்தானலட்சுமியாக காட்சி அளித்தார்.
* கோட்டூர் மலையாண்டிபட்டிணம் கோதண்டராமர் கோவிலில், நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்பகுதி பெண்கள் சார்பில், கோவில் வளாகத்தில், மாகாளியம்மன், காளியம்மன், மாரியம்மன், சிவன், விஷ்ணு, கிருஷ்ணன், ரங்கநாதர் உள்பட, 300க்கும் மேற்பட்ட சுவாமிகளின் சிலைகள் கொலுவில் வைக்கப்பட்டு உள்ளது.கொலு பொம்மைகளுக்கு முன், தினமும் பக்தர்கள் முளைப்பாரி வைத்து, பஜனை பாடல்கள் பாடி, கலை நிகழ்ச்சிகள் நடத்தி, வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி கொலு வைக்கப்பட்டு நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்காரபூஜையும் நடக்கிறது.கடந்த, 29ம் தேதி முதல், தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், ஒன்பதாவது நாள் மாலை திருவிளக்கு பூஜை நடக்கிறது.