பதிவு செய்த நாள்
07
ஏப்
2012
11:04
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் விழாவின் இறுதியாக, கம்பங்கள் எடுத்துச்சென்று நீர் நிலைகளில் சேர்க்கும் நிகழ்ச்சிகளும், இதனை ஒட்டி மஞ்சள் நீராட்டு விழாவும், இன்று மாலை நடக்கிறது.ஈரோடு பிரப் ரோட்டில் பெரியமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், அறநிலையத்துறைக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் கோவிலாகவும் விளங்குகிறது. இந்த பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த மார்ச் 20ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
விழாவை ஒட்டி, கோவில் முன்பாக பிரமாண்ட பந்தல், கடைகள் அமைக்கப்பட்டது. சிறப்பு அலங்காரம், திருவீதி உலா, திருத்தேர், பொங்கல் நிகழ்ச்சி போன்றவையும், தினமும் இரவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் பொங்கல் நிகழ்ச்சி நிரைவடைந்ததால், இறுதியாக, பெரியமாரியம்மன் கோவில் மற்றும் வகையறா கோவில்களான நடுமாரியம்மன், சின்னமாரியம்மன் கோவில்களிலும், கம்பம் எடுத்து நீர் நிலைகளில் விடும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது. மாலை 3 மணிக்கு பெரியமாரியம்மன் கோவில் கம்பம் எடுக்கப்படுகிறது. அப்போது, காரைவாய்க்கால் மாரியம்மன், டவுன் நடுமாரியம்மன் கோவில் கம்பங்களும் எடுத்து வரப்பட்டு, மணிக்கூண்டு பகுதியில் இணைந்து, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, பிரப் ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை, மேட்டூர் ரோடு உட்பட பல வழிகளில் கொண்டு செல்லப்பட்டு, அக்ரஹார வீதி வழியாக கொண்டு செல்லப்பட்டு, காரைவாய்க்காலில் கம்பங்கள் விடப்படுமென, கோவில் விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று காலை முதல், வாகன போக்குவரத்து வழித்தடம் மாற்றப்பட்டு, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.