பதிவு செய்த நாள்
09
ஏப்
2012
11:04
முதுநகர் : தியாகவல்லி கிராமத்தில் "தானே புயல் கரையைக் கடந்த 100ம் நாளான நேற்று புயலில் விழுந்த அரச மரத்திற்கு பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர். கடந்த டிசம்பர் 30ம் தேதி வீசிய "தானே புயலின் கோரத் தாக்குதலில் கடலூர் மாவட்டமே சின்னா பின்னமானது. சில நாட்களுக்கு பிறகு, தியாகவல்லி கிராமத்திற்கு வந்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தியாகவல்லி கிராமத்தில்தான் புயல் கரையைக் கடந்தது எனக் கூறினார்.
பூஜை: இந்நிலையில், புயல் கரையைக் கடந்த 100வது நாளான நேற்று, தியாகவல்லி கிராமத்தில் முந்திரிக் கொட்டை உடைக்கும் மகளிர் தொழிலாளர்கள், விளையாட்டுத் திடல் அருகே புயலின் தாக்குதலில் விழுந்த அரச மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர். இதுகுறித்து, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி மணிவண்ணன் கூறுகையில், " தானே புயல் கரையைக் கடந்து 100 நாட்களைக் கடந்த பிறகும் புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. நாங்கள் பாதுகாத்து வளர்த்து வந்த எங்கள் முன்னோர் காலத்து மரங்கள் எல்லாம் புயலில் சாய்ந்துள்ளன. மனித உயிர்கள் மறைந்தால் நினைவு அஞ்சலி செய்கின்றனர். அதே போன்று புயலில் இறந்து கிடக்கும் எங்கள் முன்னோர் காலத்து மரங்களுக்கு படையல் இட்டு, பூஜை செய்தும் வழிபடுகிறோம் என்றார்.