பதிவு செய்த நாள்
09
ஏப்
2012
11:04
ஈரோடு : ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் பங்குனி மாத திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான, கம்பம் எடுக்கும் விழா நேற்று நடந்தது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, மார்ச் 20ம் தேதி இரவு 9 மணிக்கு, பூச்சாட்டுடன் துவங்கியது. பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழாவில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து 4ம் தேதி பொங்கல் விழாவும், 5ம் தேதி தேர்வடம் பிடித்தல், மலர் பல்லக்கில் பெரிய மாரியம்மன் திருவீதி உலா நடந்தது. மாரியம்மன் வகையறா கோவில்களின் பங்குனி மாத திருவிழாவின் இறுதி நாளான நேற்று, கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி மாலையில் நடந்தது. நேற்று மாலை 3 மணிக்கு, பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்கள் எடுக்கப்பட்டு, மஞ்சள் நீர் விழா நடந்தது. மூன்று கம்பங்களும் மணிக்கூண்டு பகுதியில் ஒன்றிணைந்து, ஈஸ்வரன் கோவில் வழியாக, காரை வாய்க்காலை அடைந்து, கம்பம் விடப்பட்டது. அதேநேரம், நகரின் அனைத்து பகுதியிலும் ஆண், பெண், குழந்தைகள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி கொண்டாடினர்.