பதிவு செய்த நாள்
09
ஏப்
2012
11:04
சென்னை:சென்னையில், 90 லட்ச ரூபாய் செலவில், "இஸ்கான் இயக்கம் சார்பில் கட்டப்பட்ட ராதாகிருஷ்ணர் கோவிலின் கும்பாபிஷேகம், வரும் 26ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, நான்கு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன."இஸ்கான் எனப்படும், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், சோழிங்கநல்லூர் அக்கரைப் பகுதியில் , 2002 மார்ச் மாதம் ராதாகிருஷ்ணர் கோவில் கட்டும் பணிகள் துவங்கின. 5,000 சதுர அடி பரப்பளவில், வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில், பல்வேறு சக்கரங்கள், யந்திரங்கள் பதிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள இக்கோவிலில், ராதாகிருஷ்ணர், லலிதா விசாகா, கவுர நிதாய், ஜகந்நாதர், பலதேவர், சுபத்ரா ஆகியோரின் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.மொத்தம், 90 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இக்கோவிலின் பணிகள், பெரும்பாலும் முடிந்துவிட்டன. வரும் 26ம் தேதி காலை 8.30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், உலகம் முழுவதிலும் உள்ள"இஸ்கான் பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.இதற்கான விழா மற்றும் பிற நிகழ்ச்சிகள், இம்மாதம் 25ம் தேதி துவங்கி, 29ம் தேதி வரை நடக்க உள்ளன.