பதிவு செய்த நாள்
09
அக்
2019
01:10
புதுச்சேரி: அங்காளம்மன் கோவிலில் அம்பு உற்சவமும், மஹிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நேற்று நடந்தது. புதுச்சேரி, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும், ஒரு மாதத்துக்கு மேலாக நடக்கும் நவராத்திரி பெருவிழா பிரசித்திப்பெற்றதாகும். இந்தாண்டு நவராத்திரி பெருவிழா, கடந்த 29ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
வரும் 24ம் தேதி வரை நடக்கும் நவராத்திரி விழாவில், தினமும் அங்காளம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டு, அம்மன் உள்புறப்பாடு நடந்து வருகிறது. விஜயதசமியை முன்னிட்டு, மஹிஷாசூரன் சம்ஹாரம் செய்யப்பட்ட சம்பவத்தை நினைவுகூறும் வகையில், அம்மனுக்கு மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டு, வாழைமரத்தில் அம்புகளை எய்து வீழ்த்தும் அம்பு உற்சவம் நேற்று நடந்தது. தொடர்ந்து, சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி புறப்பாடு நடந்தது. மாட வீதிகளான சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி, நேரு வீதி, அண்ணா சாலை, அம்பலத்தாடையார் மடம் வீதி, காந்தி வீதி, நேரு வீதி வழியாக வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் விஜயக்குமார் மற்றும் அறங்காவலர் குழுவினரும், நிர்வாக அதிகாரி ஜனார்த்தனனும் செய்திருந்தனர்.