பதிவு செய்த நாள்
09
அக்
2019
03:10
விழுப்புரம்:விழுப்புரம் அருகே அரசூர் மலட்டாற்றில் ஜீவநதி மலட்டாறு நிலத்தடி நீர் மேம் பாட்டு எழுச்சி கூடல் அமைப்பு சார்பில் மழை வேண்டி வருண பூஜை நடந்தது.
அமைப்பு தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். நேற்று 8ம் தேதி காலை 11.00 மணிக்கு வேதவிற்பன்னர்கள் கணபதி பூஜையோடு, ஹோமங்களை துவக்கினர். தொடர்ந்து லட்சுமி ஹோமம், 108 மூலிகை ஹோமம், பூர்ணாஹூதி செய்யப்பட்டு, மழை வேண்டி வருணபூஜை நடந்தது.
பின், ஹோமத்தில் வைத்து பூஜித்த புனிதநீர் ஆற்றில் ஊற்றப்பட்டு, மலர்துாவி வருணபக வான் வழிபாடு செய்யப்பட்டது. இதில், கடலுார், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம், டி.எடையாரில் இருந்து பிரியும் மலட்டாறு கடலுார் மாவட்டம் வரை செல்கிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆற்றில், கடந்த 1972ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆங்காங்கே மணல் மேடுகள் உருவாகி நீர்வரத்து தடைபட்டன.
இதையடுத்து ஜீவநதி மலட்டாறு நிலத்தடி நீர் மேம்பாட்டு எழுச்சி கூடல் அமைப்பு சார்பில் விவசாயிகள் பங்களிப்போடு, கடந்த 1991ம் ஆண்டு, ஆறு துார்வாரப்பட்டது.
இதனால், கடலுார் மாவட்டம் கட்டமுத்துப்பாளையம் வரை நீர்வரத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. இந்த அமைப்பு சார்பில் நடத்தப்படும் வருண பூஜையால், ஆற்றில் நீர்வரத்து ஏற்படும் என விவசாயிகள், மக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது.