காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அத்திரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி வளாகத்தில் காமாட்சியம்பாள் சமேத ஸ்ரீஅத்திரீஸ்வரர் மற்றும் ஸ்ரீகுத்ஸ்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவில் சமீபத்தில் புனரமைப்பு செய்யப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் சரஸ்வதி தேவி சன்னிதியும் கட்டப்பட்டது. திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், சனிக்கிழமை கணபதி ஹோமமும், கோ பூஜையும், யாகசாலை பூஜைகளும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பட்டு, விநாயகர், முருகர், அத்திரீஸ்வரர், குத்ஸ்யேஸ்வரர், சரஸ்வதி ஆகிய சன்னிதிகளில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. காலை 11 மணிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.